ஜெயலலிதாவுக்கு இரட்டை இலைக்கான அர்த்தம் தெரியுமா?: தா.பா 'அடடே' கேள்வி!
சென்னை: அதிமுகவின் சின்னமான இரட்டை இலையின் அர்த்தம் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்குத் தெரியுமா? என்று கேட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் விஸ்வநாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஜெயலலிதா, பிரச்சாரத்தில் பாஜகவை தாக்குவது மாதிரி பேசியிருக்கிறாரேயொழிய, பாஜகவை தாக்கவில்லை. பாஜக வெளியிட்டுள்ள ராமர்கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கான 370வது பிரிவு இவற்றைப் பற்றி அவர் கருத்தை தெளிவுப்படுத்த வேண்டும். அதற்காக பாஜகவை எதிர்க்கிறேன் என்று சொன்னால் அது கொள்கை எதிர்ப்பு. அவ்வாறு அவர் சொல்லவில்லை.
சந்தர்ப்பவாத கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வரும். தமிழகத்தில் தற்போது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை அனைத்து கட்சிகளும் அமைத்துள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிகமான பேராசை உள்ளது. 40 தொகுதிகளில் போட்டியிடும் ஜெயலலிதா எப்படி பிரதமராக வர முடியும்?
இலையின் கதை
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை பற்றி நிறுவனர் எம்.ஜி.ஆர் அவர்கள் சொன்னது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அந்த ஊழலை அழிக்கும் மூலிகைதான் இந்த இலை என்று சொன்னார் எம்.ஜி.ஆர். அது முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியுமா?
எம்.ஜி.ஆருடன் உறவு
எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான்.
'எம்.ஜி.ஆர். கம்யூனிஸ்ட்களை வளர்த்துவிடுகிறார். அதன் விளைவுகளை அவரே பின்னர் அனுபவிப்பார்' என்று கலைஞர் அன்று அறிக்கை விட்டார்.
மக்கள் ஆதரவு
மக்களின் மகத்தான ஆதரவு இருக்கும்போது அதிக மக்கள் ஆதரவு இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏன் கட்டி அழுகிறீர்கள் என்று எம்.ஜி.ஆரிடம் பலரும் கேட்ட போதும், கம்யூனிஸ்ட்களின் ஆதரவு. ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் மாதிரி என்று சொன்னவர் எம்ஜிஆர்.
நாங்கள் மோர் மாதிரி
ஒரு வசதி படைத்த கட்சியுடன் உறவுகொண்டால் எவ்வளவு வசதிகள் அவருக்கு வரும் என்று அந்த நண்பர் வர்ணித்தபோது, 'ஒரு குடம் பாலில் ஒரு துளி மோர் விழுந்தாலும் அது தயிராகிவிடும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வரும். வெண்ணையை உருக்கினால் நெய் நறு மணத்தோடு வரும். இதற்குப் பதில், ஒரு குடம் பாலில் ஒரு பல்லி விழுந்தால்? பாலும் பாழ்பட்டுப் போய்விடும். கம்யூனிஸ்ட்களை தயிராக்கி நெய் கிடைக்க உதவும் மோர் ஆக நினைக்கிறேன். நீங்கள் துளி விஷத்தைப் போடப் பார்க்கிறீர்கள் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்.
தோழர்களின் மீது நம்பிக்கை
மக்களுக்கு வழிகாட்டும் நடிகனாக இருக்க விரும்புவதால் தோழர்களைத்தான் நம்புகிறேன். நான் ஜீவாவுடன் பழகியவன். வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியபோது தனக்கு வேண்டாம் என்று மறுத்தவர் அந்த மாமனிதர். அவர் வளர்த்த கட்சிக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது. இந்த வாதங்களைக் கேட்கும் வாய்ப்பு அம்மையாருக்குக் கிடைக்காமல் போனது, தமிழ்நாட்டு வரலாற்றுக்கு ஒரு விபத்தாக ஆகிவிட்டது என்றார் பாண்டியன்.
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா, பாண்டியன்!?