ஈரோடு, ராமநாதபுரத்திற்கு புதிய அதிமுக மாவட்டச் செயலாளர்கள்
சென்னை: ஈரோடு மாநகர் அதிமுக செயலாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல ராமநதாபுரம் மாவட்ட செயலாளராக முனியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமியும், ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளராக எம்.எ. முனியசாமியும் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
நீலகிரி அதிமுக ஒன்றிய செயலாளர்கள் திடீர் நீக்கம்
இதற்கிடையே,நீலகிரி அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இருவரை அப் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கி அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் உள்ள எஸ்.கலைச்செல்வன், குந்தா ஒன்றியக்கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் அவர்கள் வகித்து வரும் ஒன்றிய செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு பதிலாக, நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் கே.பி.ஹேம்சந்த் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்),
குந்தா ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் என்.மோகன் (ஒன்றியக்கழக துணைச் செயலாளர், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் எஸ்.கலைச்செல்வன், தொடர்ந்து செயலாற்றுவார். அதே போல, நீலகிரி மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் புத்திச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடர்ந்து செயலாற்றுவார் என தெரிவித்துள்ளார்.