மதுரை வந்தார் ஜெயலலிதா.. விவசாயிகள் பாராட்டு விழாவில் பங்கேற்பு
மதுரை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதற்காக விமானம் மூலம் மதுரை வந்த முதல்வர் ஜெயலலிதா கார் மூலமாக விழா மேடையைச் சென்றடைந்தார்.
முல்லைப் பெரியாறு அணை வழக்கில் 142 அடி உயரத்திற்கு தமிழகம் அணையின் உயரத்தை உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்திற்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்க வகை செய்த முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, பாணடி கோவில் அருகே ரிங் ரோடு அருகே பிரமாண்ட மாநாடு போல பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இதையடுத்து இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்தார் ஜெயலலிதா. அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
இதையடுத்து பாராட்டு விழா நடைபெறும் இடத்திற்கு கார் மூலமாக வந்தடைந்தார் ஜெயலலிதா.
இந்த விழாவுக்கு, கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க பகிர்மான குழுத்தலைவர் அருள்பிரகாசம், வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் விழாவில் பங்கேற்கின்றனர். ஏற்புரையாக முதல்வர் ஜெயலலிதா பேசுவார். விழாவுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.