காவிரி... சட்டசபையில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? கருணாநிதிக்கு ஜெ. சவால்
ஆரணி: காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி கருணாநிதி விடுத்த சவாலை ஏற்கிறேன்.. சட்டசபையில் நேருக்கு நேர் விவாதிக்க வர முடியுமா? என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
வேலூர் லோக்சபா தொகுதியில் ஆரணியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா பேசியதாவது:
மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்குறை மாநிலமாக மாற்றியது கடந்த தி.மு.க. அரசுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மத்திய காங்கிரஸ் அரசில் கூட்டணி வகித்த தி.மு.க, தமிழக மின் திட்டங்களில் கவனம் செலுத்தவில்லை.
மின்பற்றாக்குறையை போக்க..
தற்போது எனது தலைமையிலான அரசு மின் பற்றாக்குறையை போக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 12,170 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 3,190 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும்.
சந்தேகமாக இருக்கே..
தேர்தல் நெருங்கும் நேரங்களில் மின் நிலையங்கள் பழுதடைந்து முடங்கியுள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலின்போதும் மின் உற்பத்தி முடங்கி தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் மின் தட்டுபாடு ஏற்படுவதும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அ.தி.மு.க. அரசை குறை கூறுவதும் சந்தேகமளிக்கிறது.
சவாலை ஏற்கிறேன்..
காவிரி நதி நீர் பிரச்னையில், கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். காவிரி நதிநீர் பிரச்னை பற்றி கருணாநிதியுடன் நேருக்கு விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
கருணாநிதி மட்டும்..
காவிரி நதிநீர் தொடர்பான கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விவாதிக்க நான் தயார். என்னுடன் சட்டசபையில் கருணாநிதி மட்டும்தான் விவாதிக்க வேண்டும். இதற்கு கருணாநிதி தயாரா?'
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.