ஓ.பி.எஸ்ஸை சொந்த தொகுதியிலேயே விரட்டிவிட்டார்கள்: மு.க. ஸ்டாலின்
ஈரோடு: ஜெயலலிதா மக்களை சந்திக்க பயப்படுகிறார். அதனால் தான் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறார் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பவித்ரவள்ளியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் அவர் பேசுகையில்,
திட்டங்கள்
திமுக ஆட்சியில் தாராபுரத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூ.22 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக
அன்னை சத்யா நிகரில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.36 கோடி செலவில் 912 வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் அவை பயனாளிகளிடம் முழுவதுமாக ஒப்படைக்கவில்லை. இப்படி திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள்.
விரட்டியடிப்பு
மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்க அமைச்சர்களுக்கு தெரியவில்லை. அதனால் தான் அவர்களை மக்கள் விரட்டியடிக்கிறார்கள்.
ஜெயலலிதா
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார், எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த கேள்விகளை மக்களே கேட்கத் துவங்கிவிட்டனர். இதனாலேயே அதிமுக அமைச்சர்களால் வாக்கு கேட்டு மக்களை சந்திக்க முடியவில்லை.
ஓ.பி.எஸ்.
அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது சொந்த தொகுதிக்குள் நுழையவிட வில்லை. அதனால் தான் ஜெயலலிதா மக்களை சந்திக்க பயப்படுகிறார். எனவே ஹெலிகாப்டரிலேயே வந்து செல்கிறார்.
மின்தட்டுப்பாடு
தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டால் விசைத்தறி தொழில் நசிந்துவிட்டது. மின் தட்டுப்பாடு சீராகும் என்று ஒவ்வொரு முறையும் தேதி, நேரம் குறிப்பிட்டு முதல்வர் கூறுகிறார். ஆனால் மின் தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை என்றார் ஸ்டாலின்.