பிளாஷ்பேக்... "இதோ இவர்தான் உங்கள் அடுத்த முதல்வர்"... ஜெ. கொடுத்த "ஷாக்"!
சென்னை: முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஜெயலலிதா, அடுத்து யார் முதல்வர் என்பதைக் கூறப் போகிறார் என்று தமிழகமே ஆவலுடன் காத்திருந்தபோது அவர் கை காட்டிய புதிய முதல்வரைப் பார்த்து தமிழகமே ஆச்சரியமும், திகைப்பும் அடைந்து போனது.
காரணம் அதுவரை யாரெல்லாம் முதல்வராக வரக் கூடும் என்று மக்கள் கற்பனை செய்து வைத்திருந்தார்களோ அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒருவரை முதல்வராக அறிவித்தார் ஜெயலலிதா.
இவரா முதல்வர், இவர் யார் என்றே தெரியவில்லையே என்றுதான் பலரும் திகைத்துப் போனார்கள்.. அந்தப் புதிய முதல்வர் ஒச்சாத் தேவர் பன்னீர் செல்வம். சுருக்கமாக ஓ.பன்னீர் செல்வம்.. இன்னும் சுருக்கமாக ஓ.பி.எஸ்.
எதிர்பார்த்துக் காத்திருந்த "பெருசுகள்"
அடுத்த முதல்வர் யார், ஜெயலலிதா இடத்தில் அமரப் போவது யார் என்று அத்தனை பேரும் தலையை உடைத்துக் கொண்டனர். எல்லோருடைய பார்வையும் மூத்த அமைச்சர்களான பொன்னையன் போன்றோர் மீதுதான் இருந்தது.
தீவிர யோசனைகள்
யாரெல்லாம் முதல்வர் பதவிக்கு வரலாம் என்ற யூகங்கள் கொடி கட்டிப் பறந்தன. பலருடைய பெயர்களையும் மீடியாக்களும், மக்களும் கூட்டாக அலசினர்.
விசாலாட்சி நெடுஞ்செழியன்
மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சிக்குப் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சசிகலா குடும்பத்திலிருந்து யாராவது
சசிகலா குடும்பத்திலிருந்து யாராவது வரலாமா என்ற எதிர்பார்ப்பும் சூடாக காணப்பட்டது.
பாஸ்கரன்- தினகரன்
அப்போது லைம்லைட்டில் இருந்தவர்களான சசி குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கரன், தினகரன், இளவரசி, அனுராதா தினகரன் ஆகியோரின் பெயர்களும் அலசப்பட்டன.
பொன்னையன் - சரோஜா - வளர்மதி
பொன்னையன், சரோஜா, வளர்மதி ஜெபராஜ், வளர்மதி இவர்களில் யாராவது ஒருவர் தான் அடுத்த முதல்வர் என ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேச்சு எழுந்தது. இவர்களில் வளர்மதி ஜெபராஜின் பெயர் தீவிரமாகவே அடிபட்டது.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இப்படி பெரும் எதிர்பார்களுக்கு மத்தியில் செப்டம்பர் 21ம் தேதி மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா.
குவிந்திருந்த கூட்டம்
யாரோ ஒரு சீனியரைத்தான் அவர் முதல்வராக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் மத்தியிலும் இருந்தது. இதனால் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் செய்தியாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் குவிந்திருந்தனர். அவர்களிடையே தனது கட்சியினர் புடை சூழ பேசிய ஜெயலலிதா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதோ இவர்தான்...!
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் இவர்தான் அடுத்த முதல்வர் என்று அவர் கை காட்டியவரைப் திரும்பிப் பார்த்த செய்தியாளர்களுக்கு ஆச்சரியம்..
குனிந்து நின்ற ஓ.பன்னீர் செல்வம்
அங்கே கைகளை கூப்பியபடி, வளைந்து நெளிந்து நின்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர். அதிகம் அறிமுகம் இல்லாத மிக மிக அமைதியான அமைச்சராக அறியப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்தான் அடுத்த முதல்வர் என்பதை அங்கிருந்த யாராலுமே நம்ப முடியவில்லை.