ஹெலிகாப்டர்ல இருந்து 'அம்மா' பார்த்தா பெரிய கூட்டம் மாதிரி தெரியுமா?- கிரேனில் ஏறி பார்த்த அமைச்சர்
சென்னை: தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வரும்போது கூட்டம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்பது அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டுள்ள உத்தரவு.
எனவேதான் கூட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு சென்று ஹெலிபேட் அமைப்பதை பார்வையிடுவது தொடங்கி, கூட்டம் வந்திருக்கிறதா என்று கிரேனில் ஏறி கணக்கெடுப்பது வரை அமைச்சர்களே கண்காணிக்கின்றனர்.
கிரேன் கேமரா
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோவையில் நடைபெற்ற கூட்டத்தை கவர் செய்ய ஒரு கிரேனைக் கொண்டுவந்து நிறுத்தி அதன் மூலம் கூட்டத்தை ஜெயா டி.வி. கேமராவில் கவர் செய்தனர். அது ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடித்துவிடவே, அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு கூட்டங்களிலும் கட்டாயம் கிரேன் பயன்படுத்தப்படுகிறது.
கூட்டம் சேர்க்க
தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக அதிமுகவினர் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கி உள்ளனர்.
தொழிற்சாலைகளுக்கு விடுமுறை
கிராமப்புறங்கள் சுற்றியுள்ள இடமாக தேர்வு செய்து, தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்கின்றனர். உணவு, இலவச சேலை, கை செலவுக்கு பணம் போன்றவையும் கொடுக்கப்படுகிறதாம்.
பட்டாசு தொழிற்சாலைகளில்
சிவகாசியைச் சுற்றி உள்ள 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு விடுமுறை அளித்துதான் ஜெயலலிதாவின் பிரசாரத்திற்கு ஆள் சேர்த்தாக கூறப்படுகிறது.
வாகனங்களில் கூட்டம்
கிராமங்களில் இருந்து வாகன ஏற்பாடு செய்தும், இலவச சேலைகள் வழங்கப்படும் எனக் கூறியும் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டத்துக்கு அதிமுகவினர் ஆள் சேர்த்து வருவதாக தெரிகிறது. இதற்காக வேன்கள் மற்றும் கார்கள் மொத்த வாடகைக்கு எடுத்துவிடுகின்றனர்.
வெயிலில் காயும் மக்கள்
காலையில் இருந்தே கூட்டத்தை கூட்டி வந்து வெயிலில் காயவைத்து விடுகின்றனர். அதைப்பற்றி கவலைப்படாமல் கூட்டம் சரியாக இருக்கிறதா? ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது கூட்டம் தெரியுமா? முதல்வர் திருப்தியடைவாரா என்றெல்லாம் செக் செய்வது அமைச்சரின் வேலையாக இருக்கிறது.
அது யாருக்கு வேணும்
பிரசார கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் யாரும் பேச்சை கவனிப்பதாக தெரியவில்லை. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு... எப்படா இந்த அம்மா முடிக்கும் சீக்கிரம் ஊருக்குப் போகலாம் என்ற ரீதியிலேயே அமர்ந்திருப்பதையும் காணமுடிகிறது.
விடிய விடிய வேலை
39 தொகுதிகளிலும் தனி ஆளாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும் ஜெயலலிதாவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள்தான் அத்தனை ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.
பிரம்மாண்டம் காட்டணும்
பிரசாரத்திற்காக ஜெயலலிதா வந்து செல்வது சில மணிநேரங்கள்தான் என்றாலும் பல நாட்கள் கண்தூங்காமல் பணிகளை கவனிக்கின்றனர் அமைச்சர்கள். மின்சாரம், பந்தல், சீரியல் செட், மக்கள் கூட்டம் என பணிகளை கவனித்து முதல்வரின் குட்புக்கில் இடம்பெற வேண்டும் என்று போராடி வருகின்றனர் அமைச்சர்கள்.