சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்: முதல்வரை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டியுள்ளது. தூத்துக்குடி, கோவையில் மேயர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடி, கோவைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோவை, தூத்துக்குடி மாநகராட்சிகளின் மேயர் பதவி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் தீவிரப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் பிரசாரம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளை தூத்துக்குடிக்கு வருகிறார். இதற்காக தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தில் பாதுகாப்பு
அந்த மைதானம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாநகர், குரூஸ்பர்னாந்து சிலை, திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
அழகாகும் தூத்துக்குடி
அந்த பகுதிகளுக்கு செல்லும் வழிகளில் உள்ள வேகத்தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. சாலைகள் பழுது பார்க்கும் பணிகளும், அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
தோரணங்கள், கொடிகள்
முதல்வரை வரவேற்கும் வகையில் பழைய பேருந்து நிலையம் அருகே 2 ரோபோ யானைகள் நிற்க வைக்கப்பட்டு இருக்கின்றன. ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகரமெங்கும் வழி நெடுகிலும் அ.தி.மு.க.வினர்,தோரணங்கள் ,வளைவுகள்,கொடிகள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
பாஜக பிரசாரம்
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் ,பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான ஜெயலெட்சுமிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்களும் ,பிரைய்ண்ட் நக்ர் ,அண்ணாநகர் , டூவிபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதிமுகவினர் ஆதரவு
பாஜக வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. வின் தூத்துக்குடி மாவட்ட செயலாளரான ஜோயல் லெவின்சிபுரம் , சிதம்பரநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவையில் ஏற்பாடுகள்
இதேபோல் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா வரும் 15ம் தேதி கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குனியமுத்தூர் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மாகாளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.