எல்லாவற்றையும் மனதில் கொண்டு வாக்களியுங்கள்.. தூத்துக்குடியில் ஜெ. பிரசாரம்
தூத்துக்குடி: பாஜக இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. டெல்லியில் ஒன்றைப் பேசுகிறது, தமிழகத்தில் வேறு மாதிரிப் பேசுகிறது. அந்தக் கட்சியை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த இடைத் தேர்ல் பிரசாரத்தின்போது முதல்வர் ஜெயலலிதா கடுமையாக கூறினார்.
தூத்துக்குடியில் இன்று மேயர் இடைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸை ஆதரித்து அவர் வேனில் இருந்தபடி பிரசாரம் செய்து பேசினார்.
அப்போது, இந்தத் தேர்தலில் சில சுயேச்சைகளும், ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளரும் மட்டுமே களத்தில் உள்ளனர். அந்த தேசியக் கட்சி பல முக்கியப் பிரச்சினைகளில் இரட்டை நிலையை எடுத்து வருகிறது. டெல்லியில் ஒரு மாதிரி பேசுகிறார்கள். இங்கு வந்தால் இன்னொரு மாதிரி பேசுகிறார்கள். இப்படிப்பட்ட கட்சியை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.
மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, அண்டை மாநிலங்களுடனான பல்வேறு நதி நீர்ப் பிரச்சினைகளில் அதிமுக அரசு சட்ட ரீதியான வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளது. எங்களது கோரிக்கைகள் நிறைவேறாதபோது உச்சநீதிமன்றத்தை அணுகி வெற்றி பெற்றிருக்கிறோம்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே விலைவாசி உயர்வு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கத்தான் தமிழக அரசு விலையில்லா அரிசி, விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அதேபோல பல்வேறு சமூக நலத் திட்டங்களான தாலிக்குத் தங்கம், விலை குறைந்த உணவகங்கள், மினரல் வாட்டர், உப்பு, கல்வி உதவித் தொகை, பசுமைக் காய்கறிக் கடைகள் உள்ளிட்டவற்றையும் இந்த அரசு வழங்கி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகால அ.தி.மு.க., அரசின் சாதனைகளைப் பார்த்து, கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு வெற்றியை அளித்தீர்கள். இதே போல், உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல திட்டங்களையும் அறிவித்துள்ளோம். எனவே அவற்றை மனதில் கொண்டு தூத்துக்குடி மாநகர மக்கள் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசியை வெற்றி பெற் செய்ய வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.