காவிரி விவகாரம்: வைகோ- ராமதாசுக்கு ஜெ. கேள்வி
முசிறி: காவிரி நதிநீரைப் பெற்றுத் தர பாரதிய ஜனதா கட்சியிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உத்தரவாதம் பெற்றிருக்கின்றனரா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட முசிறியில் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா பேசியதாவது:
காவிரி நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ், பாஜக அரசுகள் துரோகம் செய்தே வந்துள்ளன. முந்தைய பாஜக அரசு அமைத்த காவிரி நதிநீர் ஆணையத்தால் பயனில்லை. அதனால் அந்த ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்றோம்.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் அரசுகள் காவிரி நீரை தர மறுத்தே வருகின்றன. அப்படிப்பட்ட பாஜகவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தருவோம் என்று அதனுடன் கூட்டணி அமைத்துள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உத்தரவாதம் பெற்றுள்ளனரா?
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.