"மக்களின் முதல்வர்".... ஜெயலலிதாவுக்குப் புதுப் பட்டம்... கொடுத்தது ஜெயா டிவி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி போய் விட்டாலும் கூட ஜெயா டிவியைப் பொறுத்தவரை இன்னும் அவர்களுக்கு முதல்வராகவே தெரிகிறார் போலும். ஆனால் நேரடியாக முதல்வர் என்று கூற முடியாதே என்பதால் மக்கள் முதல்வர் என்ற புதுப் பெயரைச் சூட்டி அதை வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜெயா டிவியின் செய்திகளிலும், ஜெயா பிளஸ் சானல் செய்திகளிலும் மக்கள் முதல்வர், மக்கள் முதல்வர் என்றே அழைக்க ஆரம்பித்துள்ளனர் ஜெயலலலிதா.
அதிலும் ஜெயா பிளஸ் சானலில் முழுக்க முழுக்க ஜெயலலிதா குறித்த செய்திகள் மட்டுமே. வேறு செய்திகளுக்கு அங்கு இடமே இல்லை.
சிறையில் ஜெயலலிதா
பெங்களூர் சிறையில் ஜெயலலிதாவை அடைத்து இன்றோடு நான்கு நாட்களாகின்றன. இன்னும் ஜெயா பிளஸ் செய்தி சேனலில் ஜெயலலிதா குறித்த செய்திகள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவினரின் போராட்டங்கள்
அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றைத் திரும்பத் திரும்பக் காட்டி வருகின்றனர்.
எப்போது ஆன் செய்தாலும் ஏதாவது ஒரு அழுகை
எப்போது சானலை ஆன் செய்தாலும் யாராவது ஒருவர் அழுதபடி இருக்கிறார். குறிப்பாக பெண்களின் அழுகையைத்தான் அதிகம் காட்டுகின்றனர்.
தாயில்லாப் பிள்ளையாகிட்டோமே...
அதிலும் பல பெண்கள், நாங்கள் இப்போது தாயில்லாப் பிள்ளையாகிட்டோமே, அனாதையாகிட்டோமே என்றெல்லாம் அழுவதைப் பார்த்தபோது.. பார்க்கவே பாவமாக இருந்தது!.
மக்கள் முதல்வர்
ஜெயலலிதாவை எப்படிக் கூப்பிடுவது என்பதில் ஜெயா டிவி டெஸ்க்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும்போலும். உட்கார்ந்து டிஸ்கஸ் செய்து புதுப் பெயரை உருவாக்கி விட்டார்கள். அந்தப் பெயர்தான் மக்கள் முதல்வர்.
மக்களின் ஜனாதிபதி போல..
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இப்படித்தான் எல்லோரும் மக்களின் ஜனாதிபதி என்று அழைத்தனர். அந்த பாணியில் ஜெயலலிதாவுக்கும் மக்களின் முதல்வர் என்று பெயர் சூட்டியுள்ளது ஜெயா டிவி.
ஜனங்களின் கலைஞன் போல..
அதேபோல நகைச்சுவை நடிகர் விவேக்கையும் கூட ஜனங்களின் கலைஞன் என்று கூப்பிடுவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதாவும் இணைந்துள்ளார்.
டிராபிக் ராமசாமி கேஸ் போடாமல் இருக்க வேண்டுமே...
ஆனால் முதல்வர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி டிராபிக் ராமசாமி போன்றோர் கேஸ் போடாமல் இருக்க வேண்டுமே...!