ஜெயலலிதாவுக்கு அநியாயம்: ஜனாதிபதியிடம் மனு அளிக்கும் அதிமுக எம்.பிக்கள்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவகாசம் தராமல் சிறையில் அடைத்துவிட்டதாக புகார் தெரிவித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நாளை மனு அளிக்க அதிமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா.
இவரை ஜாமீனில் விடுவிக்க அதிமுக வக்கீல்கள் நேற்றும், இன்றும் நடத்திய முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டன. தசரா விடுமுறைகள் காரணமாக ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க முடியாமல் அதிமுக வக்கீல்கள் திணறிவருகின்றனர்.
சட்ட ரீதியாக தோல்வியடைந்துவரும் இந்த பிரச்சினையை, அரசியல்ரீதியாக நகர்த்த அதிமுக முடிவு செய்துள்ளதுபோல தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் நாளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 27ம்தேதி ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. பொதுவாக, குற்றவாளி என்று நீதிபதி அறிவிப்பது ஒருநாளும், தண்டனை விவரத்தை அறிவிப்பது மறுநாளுமாக இருக்கும். ஆனால் ஜெயலலிதா வழக்கில், குற்றவாளி என்று தீர்ப்பளித்த அன்றே, அவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதத்தையும் நீதிபதி குன்ஹா விதித்துவிட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த கருத்துக்களை ஜனாதிபதியிடம் எடுத்து வைத்து, ஜெயலலிதாவை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எம்.பிக்கள் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நாளை அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் பிரணாப்பை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
பிரணாப் இப்போது துர்கா பூஜைக்காக மேற்கு வங்க மாநிலத்தில் சொந்த கிராமத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.