வருமான வரி வழக்கு: எழும்பூர் கோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க ஜெயலலிதா மனு!
சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக்கோரி வருமானவரித்துறை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, வருமான வரித்தொகையை அபராதத் தொகையுடன் சேர்த்து கட்டிவிடுவதாக ஜெயலலிதா தரப்பில் வருமான வரித்துறையுடன் சமரச மனு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க காலநிர்ணயம் செய்திருப்பதால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, அன்று நடைபெறும் விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, எழும்பூர் நீதிமனற உத்தரவை எதிர்த்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ''வருமான வரித்துறையுடன் சமரச மனு நிலுவையில் உள்ளது. எனவே, அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு தடைக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து சசிகலா தரப்பிலும் தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறும் எனத் தெரிகிறது.