இளம்பெண்ணை நிர்வாணமாக்கி பூஜை செய்த தேவிப்பட்டினம் ஜெ.பேரவை செயலாளர் கைது!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இளம்பெண் ஒருவரை வைத்து நிர்வாண பூஜை நடத்திய ஜெயலலிதா பேரவை செயலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள நவக்கிரக ஸ்தலமான தேவிபட்டினத்தில் கடலுக்கு நடுவே உள்ள நவகிரகங்களை வழிபட நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கடந்த 14 ஆம் தேதி திருப்பூர் அருகே உள்ள கீழசேவல்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தேவிபட்டினம் வந்துள்ளனர்.
கொடி சுற்றிப் பிறந்த குழந்தை:
இந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்துள்ளது.குழந்தை பிறந்த போது அதன் உடலில் கொடி சுற்றி பிறந்துள்ளது.
ஜோதிடரின் அறிவுரை:
கொடி சுற்றி பிறந்ததால் அந்த குழந்தைக்கு ஆபத்து நேரலாம் என கருதிய அவர்கள் தங்கள் ஊர் ஜோதிடர் ஒருவரை அணுகியுள்ளனர். அந்த ஜோதிடர் தேவிபட்டினத்தில் உள்ள நவகிரகங்களை பூஜித்து வந்தால் தோஷம் விலகும் என கூறியுள்ளார்.
தோஷம் கழிக்க முடிவு:
இதையடுத்து தோஷம் கழிப்பதற்காக தேவிபட்டினம் வந்த இவர்கள், யாத்திரைகளுக்கு வழிகாட்டும் கற்பூர சுந்தரம் என்பவரிடம் சென்றுள்ளனர். கற்பூர சுந்தரம், தேவிபட்டினத்தில் மாந்திரீகம் மற்றும் தோஷம் கழிப்பு செய்து வரும் தேவிபட்டினம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளரான கணேசமூர்த்தி என்பவரிடம் இவர்களை அழைத்து சென்றுள்ளார்.
நிர்வாண பூஜை:
14 ஆம் தேதி இரவு தோஷம் பாதித்த இளம் பெண்ணை மட்டும் நவகிரகங்கள் இருக்கும் கடல் பகுதிக்கு கணேசமூர்த்தி அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து விட்டு முழு நிர்வாண நிலையில் நிற்க வைத்து பூஜைகள் நடத்தியுள்ளார்.
அரைமயக்கத்தில் இளம்பெண்:
அந்தநேரத்தில் அப்பெண் அரைமயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அப்பெண்ணால் இதனை உணரமுடியவில்லை.மறுநாள் காலை அந்த பெண் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் வந்துள்ளார்.
குடும்பத்தினரிடம் முறையீடு:
ராமேஸ்வரம் கடற்கரையில் குளித்து முடித்து கோயிலுக்கு செல்லும் நிலையில் அந்த பெண்ணுக்கு சுய நினைவு திரும்பியுள்ளது. இதையடுத்து தேவிபட்டினத்தில் பூஜை என்ற பெயரில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்:
இதையடுத்து தேவிபட்டினம் திரும்பிய அவர்கள் யாத்திரை வழிகாட்டியான கற்பூரசுந்தரத்தை சந்தித்து முறையிட்டுள்ளனர். கற்பூரசுந்தரம் இது தொடர்பாக தேவிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
கணேசமூர்த்தி கைது:
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரான கணேசமூர்த்தியை கைது செய்து உள்ளனர்.