முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சு... ஸ்டாலின் மீது அவதூறு வழக்குப் பதிவு
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் நேற்று அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து வெளியில் வந்த தி.மு.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சட்டசபைக்கு நாங்கள் (தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்) வருவதை முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. சபாநாயகர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் கூறிய இந்த குற்றச்சாட்டு, உள்நோக்கமானது. முதலமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.