"தீவிரவாதிகளின் நண்பன் ஜெ. அரசு".. சு.சுவாமியின் ட்விட்டர் விமர்சனத்துக்காக அவதூறு வழக்கு!
சென்னை: "தீவிரவாதிகளின் நண்பனாக ஜெயலலிதா அரசு உள்ளது" என்ற பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் விமர்சனத்துக்காக அவர் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சாதி, மதம், இனம் என்று எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ஆவார். அவர், கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பொதுமக்களின் பெரும் ஆதரவினை பெற்று முதல் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
|
ட்விட்டரில்..
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய ‘ட்விட்டர்' வலைதளத்தில் கடந்த செப்டம்பர் 11ந் தேதி முதல் அமைச்சர் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் நட்பு..
அதில், ‘ஜெயலலிதா அரசு தீவிரவாத அமைப்புடன் நட்பாக உள்ளது. விடுதலைப்புலி இயக்கத்தின் நிர்வாகி மறைந்த திலீபன் நினைவு தினத்தை தமிழகத்தில் கடைப்பிடிப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்' என்று கூறியுள்ளார்.
அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இந்த கருத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் முதல் அமைச்சருக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவதூறான, ஆதாரமற்ற கருத்தினை இணையதளத்தில் வெளியிட்ட சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3வது அவதூறு வழக்கு
இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சுப்பிரமணியசாமி மீது ஏற்கனவே, முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் இரண்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், தற்போது அவர் மீது மூன்றாவது வழக்கு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.