ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்... மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட ஜெ. உத்தரவு
சென்னை: ஆடிப் பெருக்கை முன்னிட்டு மக்களின் வசதிக்காக, மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நொடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
""வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று ஆடிப் பெருக்கு விழாவை சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரிப் பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தன.
இதையடுத்து, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவிரிப் பகுதி மக்கள் ஆடிப் பெருக்கை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆடிப் பெருக்கு தினமான ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காகத் திறந்துவிடப்பட்டுள்ள 800 கனஅடி நீருடன், கூடுதலாக நொடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்'.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.