மைத்ரேயனின் கட்சி பதவிகள் அதிரடியாக பறிப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்
சென்னை: அதிமுகவின் மருத்துவ அணித் தலைவர், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர், ராஜ்யசபா குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து மைத்ரேயன் அதிரடியாக நீக்கப்பட்டதற்கு பல பரபரப்பான காரணங்கள் கூறப்படுகின்றன.
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர் டாக்டர் மைத்ரேயன். அவருக்கு அதிமுக மருத்துவ அணித் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் 3 முறை ராஜ்யசபா எம்.பியானார்.
லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெயக்குமார் மகனுக்கு எதிராக உள்ளடி வேலைகளை மைத்ரேயன் செய்ததாக கூறப்படுகிறது.
சைதையாருடன் மோதல்
இருப்பினும் தென்சென்னை மாவட்ட அதிமுக பணிகளை பார்க்கும் பொறுப்பும் கூடுதலாக மைத்ரேயனுக்கு வழங்கப்பட்டது. அப்போது முதல் மேயர் சைதை துரைசாமிக்கும் மைத்ரேயனுக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட்டது.
கூடுதல் பொறுப்புகள்
மேலும் நாடாளுமன்ற குழு துணைத் தலைவர், ராஜ்யசபா குழுத் தலைவர் ஆகிய பொறுப்புகளும் மைத்ரேயனுக்கு அடுத்தடுத்து கிடைத்தன.
ஜெ.வை கமெண்ட் அடித்தார்?
இந்த நிலையில் லோக்சபா துணை சபாநாயகராக தம்பிதுரை தேர்வானபோது, ஜெயலலிதா பெயரைக் குறிப்பிட்டு மைத்ரேயன் நாடாளுமன்ற வளாகத்தில் கிண்டலடித்ததாக ஒரு புகார் தலைமைக்கு போனது.
சு.சுவாமிடயுன் நெருக்கம்?
அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று பேசிய சுப்பிரமணியன் சுவாமியுடன் மைத்ரேயன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெங்களூரில் நடைபெற்று வரும் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேற்கொண்டு வரும் லாபிகளுக்கு குறுக்கீடாக சுப்பிரமணியன் சுவாமி இருப்பதாக மேலிடம் கருதுகிறது. ஆனால் அந்த சுப்பிரமணியன் சுவாமியுடன் எப்படியெல்லாம் மைத்ரேயன் நெருக்கமாக இருக்கிறார் என்ற புகாரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிபதிகள் நியமன மசோதா
இதனிடையேதான் நீதிபதிகள் நியமன மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. இம்மசோதாவில் சில திருத்தங்களை கொண்டுவர அதிமுக விரும்பியது. குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு மாநில அளவிலான நீதிபதிகள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
அதிமுக புறக்கணிப்பு
ஆனால் இதை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிராகரித்துவிட்டார். இதனால் லோக்சபாவில் நீதிபதிகள் நியமன மசோதா மீதான வாக்கெடுப்பில் அதிமுகவின் 37 எம்.பிக்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
ராஜ்யசபாவில் வாக்களிப்பு
அதே நேரத்தில் ராஜ்யசபாவில் 11 அதிமுக எம்.பி.க்களும் நீதிபதிகள் நியமன மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இது அதிமுக மேலிடத்தை கடுமையான கோபத்துக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே மைத்ரேயன் பதவிகளை பறித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.