வீட்டுக்குள் டேபிளில் கழட்டி வைத்த நகை, பணம் மாயம் – திருச்சியில் பரபரப்பு திருட்டு!
திருச்சி: திருச்சி கல்லுக்குழியில் வீட்டு மேஜையில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கல்லுக்குழி இக்பால் காலனியை சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவர் தற்போது முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.
கல்லுக்குழியில் உள்ள வீட்டில் மனைவியின் சகோதரியான சில்பானா தங்கி இருந்து ஜமால் முகமது கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் சில்பானாவின் உறவினரான புதுக்கோட்டையை சேர்ந்த பாத்திமாகனி என்பவர் கருமண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று வந்துள்ளார்.
பின்னர் சில்பானா தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற பாத்திமா கனி இரவில் அங்கு தங்கியுள்ளார். பாத்திமா கனி தான் அணிந்திருந்த 17 பவுன் நகைகளை கழற்றி ஒரு கைப்பையில் வைத்து அங்கிருந்த மேஜையில் வைத்துள்ளனர்.
காலையில் கண் விழித்து பார்த்த போது மேஜையில் இருந்த கைப்பை மாயமாகி இருந்தது.அதில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் சேர்த்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசரணை நடத்தினர்.
விசாரணையில் சல்பானா மற்றும் பாத்திமா கனி ஆகியோர் நேற்று இரவு வீட்டில் தூங்கிய போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்ததாகவும், நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.