பத்திரிக்கையாளர் வீட்டுப் பெண்கள் என்றால் ஏளனமா... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்டனம்!
சென்னை: தங்கள் வீட்டுப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ள பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த நேற்று மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வருகை தந்தார் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
அமைச்சரின் வருகையை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரைப் புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களைத் தரக்குறைவாகத் திட்டியுள்ளார் அமைச்சர். மேலும், உங்கள் வீட்டுப் பெண்களைப் போய் படமெடுங்கள் என அமைச்சர் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், ஆவேசமடைந்த பத்திரிக்கையாளர்கள் அமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், இச்சம்பவத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது.
விசயம் விபரீதமாவதை உணர்ந்த அமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.