திண்டிவனம் கோர்ட்டில் மாட்டியிருந்த அம்பேத்கர் படத்தை அகற்றிய நீதிபதிக்கு எதிராக வழக்கு
திண்டிவனம் வக்கீல் சங்க தலைவர் கே.ஜி.சுப்பய்யா தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டிவனம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக கடந்த 2ஆம் தேதி எஸ்.தேவநாதன் பதவி ஏற்றார். அந்த நீதிமன்றத்தில், நீதிபதி இருக்கைக்கு மேல் காந்தியடிகள், திருவள்ளூவர், அம்பேத்கர் ஆகியோரது புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன.
இவர் பதவி ஏற்றவுடன், தன்னுடைய இருக்கைக்கு மேல் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்றும்படி அலுவலக உதவியாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த படத்தை அகற்ற உதவியாளர் மறுத்ததால், அவரை தன்னுடைய அறைக்குள் அழைத்து, ‘அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றவில்லை என்றால், உன்னை பணியில் இருந்து நீக்கம் செய்வேன்' என்று மிரட்டியுள்ளார். இதனால், அம்பேத்கர் புகைப்படத்தை உதவியாளர் அகற்றினார்.
இந்த தகவல் கடந்த 7ஆம் தேதிதான் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தெரியவந்தது. இதையடுத்து, சார்பு நீதிபதி தேவநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதியிடம் புகார் கொடுத்தோம். இந்த புகார் மனு, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தேவநாதன் மீது திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், புகாரை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை கூட காவல்துறையினர் தரவில்லை. இதன்பின்னர், தமிழக டி.ஜி.பி., மாவட்ட காவல்துறை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிபதி தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சொக்கலிங்கம், ஜூன் 4ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக டி.ஜி.பி., விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.