கும்பகோணம் பள்ளி தீ விபத்து: இழப்பீடு நிர்ணயம் கமிஷன் தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்
சென்னை: கும்பகோணம் தனியார் பள்ளி கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 24 பேர் மீது கிரிமினல் வழக்கப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு நீதிமன்றம், தாளாளர் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட பல்வேறு தண்டனைகளை வழங்கி கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்குவதற்கு உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதியை நியமிக்கும்படி தீ விபத்தில் பலியான குழந்தையின் தந்தை கே.இன்பராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ‘இழப்பீட்டை நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 19-ஆம்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழக அரசு தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு நிர்ணயம் செய்ய ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையிலான விசாரணை கமிஷன் அமைத்து கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்பு ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘என் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணை கமிஷனுக்கு தலைமை தாங்க முடியாது' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை, இழப்பீடு நிர்ணயம் செய்யும் கமிஷன் தலைவராக நியமிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி டி.அரிபரந்தாமன் இன்று உத்தரவிட்டார்.