படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை... ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவதா?: கி.வீரமணி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
மத்திய அரசுப் பணியாளர்களின் ஓய்வு வயது இப்பொழுது 60; அதனை 62 வயதாக உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக இன்றையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முயற்சி வேலை வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் கோடானுகோடி இளைஞர்களுக்குப் பேரிடி போன்றதோர் செய்தியாகும்!
இந்தியாவைப் பொறுத்தவரை 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 56 சதவிகிதமாகும். இது உலகளவில் 10 சதவிகிதம். இந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படாவிட்டால், எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகிவிடாதா? இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகரில் உள்ள ‘‘தொழில் அமைச்சகப் பிரிவு'' இளைஞர்களின் வேலை வாய்ப்பு - வேலைவாய்ப் பின்மை என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலையில்லை
இந்தக் கணக்கெடுப்பானது நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கைமூலம் 17 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரிடையே அதிகள வில் வேலை வாய்ப்பின்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பின்மை
இந்த வேலைவாய்ப்பின்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 விழுக்காடாகவும், புற நகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 விழுக் காடாகவும் காணப்படுகிறது. அதேநேரத்தில், எவ்விதக் கல்வியறிவும் இல்லாத 15-க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரிடையே வேலை வாய்ப்பின்மை 37 விழுக்காடாகவும் காணப்படுகிறது.இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஏற்கெனவே பணிகளில் இருப்போரின் ஓய்வு வயதை உயர்த்துவது பொறுப்பற்ற செயலாகும்.
பாஜக ஆட்சி காலத்தில்
பி.ஜே.பி. ஆட்சியில் மத்திய அரசு பணியாளர் களின் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தியபோதே அதனைக் கண்டித்துத் திராவிடர் கழகம் சைக்கிள் பயணம் நடத்தி, வேலை வாய்ப்பற்றுத் தவிக்கும் இளைஞர்களின் உணர்வினை வெளிப்படுத்தி னோம்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எண் ணிக்கை பெருகப் பெருக - விரக்தியின் உச்சக் கட்டத்திற்குச் சென்று வன்முறையில் ஈடுபடும் பேராபத்தினை ஓர் அரசாங்கமே முன்னின்று உருவாக்கலாமா?
இளைஞர்களுக்கு பாதிப்பு
மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 30.99 லட்சமாகும். இதில் ஆண்டு ஒன்றுக்கு ஓய்வு பெறுவோர் 2,80,000 (7 சதவிகிதம்). ஓய்வு வயது 62 ஆக உயர்த்தினால், கிட்டத் தட்ட மூன்று லட்சம் இருபால் இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பாதிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
16 ஆவது லோக்சபா தேர்தலைச் சந்திக்க விருக்கும் ஒரு காலகட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு - இளைஞர்களின் கோபத் திற்கு இரையாகவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வீரமணி.
சோதிடப் பாடத்திற்கு கண்டனம்
இதனிடையே தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடத் தைப் பாடமாக வைப்பதைக் கண்டித்து வரும் மார்ச் 3 ஆம் தேதியன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
அறிவியலுக்கு விரோதமான- மூட நம்பிக்கை யின் மறு வடிவமான சோதிடத்தை ஒரு பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்க முடிவெடுப்பது - அபத்தமானது - கண்டிக்கத்தக்கது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இப்படித் தான் சோதிடப் பாடத் திட்டம் வகுக்கப்பட்டது. திராவிடர் கழகம் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய நிலையில், அப்பல்கலைக்கழகம் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் உயரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. எனவே மூடத்தனத்தை வளர்க் கும் வேலையில் ஈடுபடுவதைக் கைவிடவேண்டும்.