இட்லி, சப்பாத்தி சுடுகிறார் ஜெயலலிதா: காடுவெட்டி குரு பேச்சுக்கு அதிமுகவினர் கொந்தளிப்பு
சிதம்பரம்: பா.ம.க பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு தொடர்ந்து தாக்கி பேசி வருவதால் அதிமுகவினரிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பா.ம.க சார்பில் இன்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மகளிர் அணி எழுச்சி மாநாடு குன்னத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மற்றும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த மாநாட்டில் பேசிய பெண்கள், மதுவினால் தங்கள் குடும்பங்கள் சீரழிந்தது குறித்து கண்ணீருடன் பேசினர்.
மாநாட்டில் காடு வெட்டி குரு பேசியதாவது:
அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என நம்மை ஆண்ட திராவிடகட்சிகள் நம்மை சீரழித்துவிட்டது. 1971ஆம் ஆண்டு கலைஞர் கள்ளுக்கடைகளையும், சாராயக்கடைகளையும் திறந்துவைத்தார். பிறகு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அந்த கடைகளை மூடவில்லை.
டாஸ்மாக் கடைகள்
ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது.. இவர்களுக்கு மக்கள் மேல் அக்கறையில்லை. மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் மருத்துவர் அய்யா மட்டும்தான்.
சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள மாமல்லபுரத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து ஒரு கும்பல் வன்முறையை தூண்டிவிட்டது. அதை அரசு வேடிக்கைப் பார்த்தது. அரசின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த அய்யாவை கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது.
குண்டர் சட்டம் போடுவதா?
ஜெயலலிதா தலைமையிலான அரசு. 136 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஐந்து மாதம் சிறையில் தள்ளிய ஜெயலலிதா, என்னையும் எட்டு மாதங்கள் சிறையில் தள்ளி சித்ரவதைகள் செய்தார். சிறை செல்வதற்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சுவதில்லை.
இட்லி, சப்பாத்தி சுடுகிறார்
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டுவராமல், இட்லி, சப்பாத்தி சுட்டு கொண்டிருக்கும் ஜெயலலிதா, பிரதமராக வர வேண்டும் என ஆசைப்படுகிறார். அது ஒருபோதும் நிறைவேறாது.
ஜெயலலிதாவை அகற்றுவோம்
வட தமிழகத்தில் 120 சட்டமன்ற தொகுதிகளில் வன்னிய சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளாக உள்ளது. எனவே அந்த தொகுதிகளில் பா.ம.க.வின் வேட்பாளர்களை ஜெயிக்க வைத்து 20 வேட்பாளர்களை டெல்லி செங்கோட்டைக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் நமது வாக்குகளை அப்படியே போட்டு அடுத்தமுறை ஆட்சியை பா.ம.க பிடிக்க வேண்டும். ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதுவரை ஓயமாட்டோம்" என்றார்.
அதிமுகவினர் கொந்தளிப்பு
இதுபோன்று குரு, சிறை செல்வதற்கு முன்பு அரியலூரில் பேசிய கூட்டத்தில் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கி பேசினார். அதற்காக சில மாதங்களுக்கு முன்பு அவதூறு வழக்குகள் ராமதாஸ், குரு உள்ளிட்டோர் மீது போடப்பட்டது. அதனால் இந்த முறை காவல்துறை மிகக் கவனமாக அனைத்தையும் பதிவு செய்தது.இந்நிலையில் குரு பேச்சு குறித்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பு காணப்படுகிறது.
வாக்குகளை விற்க வேண்டாம்
கூட்டத்தில் ராமதாஸ், பேசியதாவது "ஓட்டுக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு சிறை. அதனால் விலை மதிப்பற்ற வாக்குகளை விற்காதீர்கள். இந்த பெரியண்ணன் கருணாநிதிக்கும், ஜெயலலிதா அம்மையாருக்கும் மக்களைப்பற்றி கவலையில்லை. ஆண்களை குடிகாரர்களாக்கியதோடு, இந்த மது மாணவர்களையும் சீரழிக்க துவங்கியுள்ளது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறவன் நான் இல்லை. உண்மையில் வேதனையாக இருக்கிறது என்றார்.