விஜயகாந்த் 'அலை'யில் காடுவெட்டி குருவே 'பல்டி' அடிச்சிட்டாரே...!
சிதம்பரம் தனித் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை எதிர்த்து பாமக வேட்பாளராக சுதா மணிரத்தினம் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக காடுவெட்டி குரு பிரசாரம் செய்தார். அரியலூரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், விஜயகாந்தையும் லேசாக ஆதரித்துப் பேசியதால் பாமகவினரே ஆச்சரியம் அடைந்தனர்.
காடுவெட்டி குரு பேசுகையில், மணிரத்தினம் கடந்த 5 ஆண்டுகளாக இத்தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதனால் இவர் இத்தொகுதியில் மக்களின் அன்பை பெற்றுள்ளார்.
இதனால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று எண்ணி அ.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மணிரத்தினத்தின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய பெரும் முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர்.
10 நபர்கள் முன்மொழியவில்லை என்று காரணம் கூறி மனு தள்ளுபடி செய்தது தேவையற்றதாகும். மேலும் மாற்று வேட்பாளரின் வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்ய பெரும் முயற்சி செய்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, லாரி டிரைவரை லாரியுடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் எனக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது தர்மபுரியில் பேருந்தில் இருந்த 3 மாணவிகளை உயிருடன் கொளுத்திய சம்பவத்தில் இந்த துயரம் ஜெயலலிதாவிற்கு ஏற்படவில்லை.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினால் அவரை ஏதோ ஒரு குற்றச்சாட்டை கூறி வெளியேற்றுவதோடு பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. அமைச்சர்கள் ஜெயலலிதாவிற்கு முன் அசையாமல் ஆடாமல் இருப்பது போல சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினரும் நடக்க வேண்டும் என ஜெயலலிதா நினைக்கிறார். எனவே தனது கட்சியை போல அனைத்து கட்சியினரும் அடிமைகளாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மிரட்டும் வகையில் பல்வேறு வழக்குகளை ஜெயலலிதா போடுகிறார்.
எங்களுக்கே இந்த நிலை என்றால் உங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நாங்கள் உங்களுக்காக போராடுகிறேம் அதனால் உங்கள் வேட்பாளர் சுதா மணிரத்தினத்தை வெற்றி பெறவைப்பது உங்கள் கடமை என்றார் குரு.