சண்டைக்காரன் காலில் விழுவதைவிட சாட்சிக்காரனிடம் விழுவது மேல்..! இது கலைஞர் டிவி ஸ்டைல்!!
ஆளும் கட்சியின் சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக திமுகவினர் கடந்த சில நாட்களாக குற்றம்சாட்டிவருகிறார்கள். தேனி வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம், நீலகிரி வேட்பாளர் ஆ.ராசா போன்றோர் பணப்பட்டுவாடாவுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா நடத்தும் அளவுக்கு சென்றனர்.
இதனிடையே தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக பொருளாளர் ஸ்டாலின், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதாகவும் அதை தடுக்குமாறும் மனு அளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சி சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் அரவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனிடையே நேற்றிரவு விடியவிடிய, மாநிலம் முழுவதிலும் பல தொகுதிகளில் சில கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா
செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது. ஒரு ஓட்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை தொகுதியை பொறுத்து பண மதிப்பு மாறியதாகவும் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதால் பணம் கொடுப்போரை கூட்டமாக சென்று தடுக்கமுடியாமல் போனதாக திமுகவினர் புலம்புகிறார்கள்
இந்நிலையில்தான் இனியும் காவல்துறையை நம்பி பிரயோஜனம் இல்லை, மக்களிடமே முறையிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது திமுக. இதன் ஒருபகுதியாக, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காலை முதல் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதற்கு எதிராக பிச்சார வாசகங்களை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
அதில், உங்கள் விலை மதிப்பில்லாத வாக்குகளை பணத்திற்கு விற்காதீர்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம் பணப்பட்டுவாடாவால் தேர்தல் முடிவில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் திமுக மத்தியில் பரவியுள்ளது நன்கு தெரிகிறது.