சென்னையில் அக்கிரமம் செய்த 'கந்துவட்டி மன்னன்' காமராஜ் கைது
சென்னை: சென்னையில் கந்துவட்டி மன்னன் காமராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை காரப்பாக்கம் இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவர் எவர்சில்வர் பாத்திரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவுபடுத்த அவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை புரசைவாகத்தைச் சேர்ந்த காமராஜ்(39) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
காமராஜ் சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் துணிக்கடை வைத்துள்ளார். சண்முகம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்த பிறகும் வட்டிக்கு வட்டி கட்டுமாறு காமராஜ் வற்புறுத்தி வந்ததோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதையடுத்து சண்முகத்தின் மகன் டில்லிராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது தந்தை சண்முகம் தான் வாங்கிய ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.30 லட்சத்து 25 ஆயிரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும், எனது தந்தை கடனுக்காக கொடுத்த சொத்து ஆவணங்களை காமராஜ் திருப்பி தர மறுக்கிறார். ஏற்கனவே பெற்ற ரூ.30.25 லட்சம் போக, மேலும் ரூ.27 லட்சம் கேட்டு, மிரட்டுகிறார். அவர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தந்தை கொடுத்த சொத்து ஆவணங்களை திருப்பி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை திங்கட்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காமராஜ் சண்முகத்தை போன்று பலரை மிரட்டி கந்துவட்டி வாங்கியது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் காமராஜ். அவரது குடும்பத்தார் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வசிக்கிறார்கள். காமராஜால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக வந்து புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.