2016லிலும் திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான்: ஸ்டாலின்
சென்னை: 2016ஆம் ஆண்டிலும் திமுகவின் முதல்வர் வேட்பாளர் கருணாநிதிதான். அவர் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எனக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.வின் சார்பில், தந்தை பெரியாரின் 136வது பிறந்தநாள், பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள், தி.மு.க.வின் 66வது பிறந்த நாள் என முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (15ஆம் தேதி) நடந்தது.
இந்த விழாவில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பாரதிதாசன் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கருணாநிதி பரிசு வழங்கினார். சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான பண முடிப்பையும் அவர் வழங்கினார். மேலும், அண்ணா விருது முனைவர் ஜானுக்கும், பாவேந்தர் விருது, புதுக்கோட்டையை சேர்ந்த விஜயாவுக்கும், கலைஞர் விருது நடிகர் குமரிமுத்துவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு விருதுடன் ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பத்திரிகை சுதந்திரத்திற்கு வழிவகுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால், தி.மு.க.வுக்கு எதிராக பத்திரிகைகள் திட்டமிட்டு அவதூறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
எனக்கும், கருணாநிதிக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை. வரும் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கருணாநிதிதான் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
அந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமைக்கும்'' என்று ஸ்டாலின் கூறினார்.