திமுக வெற்றி உறுதியென்றாலும் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- கருணாநிதி
சென்னை: திமுக வெற்றி பெறுவது உறுதியென்றாலும் தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து,...
''நாளை தமிழகத்திலே நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, உழைத்த உழைப்புக்கான அறுவடையை காணக்கூடிய நாள்.
நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந்தமும்தான்
நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாக பிரச்சாரம் செய்வது முடிந்து விட்டது. நமது கட்சியின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் க.அன்பழகனும் வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்கு காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதை கடந்தும் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், க.அன்பழகனும், கேரளத்தில் அச்சுதானந்தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டியிருந்தன.
ஸ்டாலின் பிரச்சாரத்தை பாராட்டாத ஏடுகளே இல்லை...
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதிலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனிலேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்த தேர்தலில் அவருடைய பிரச்சாரம் பற்றி பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாகவும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.
மிகப்பெரிய வெற்றியை பெற்றிட...
நான் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கட்சி தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை பற்றி விரிவாக கூறியிருந்தேன். எனவே கட்சி தோழர்கள் அனைவரும் அந்த அடிப்படை இலக்கணத்தை மனதிலே கொண்டு, தங்களால் குறைந்தபட்சம் ஒரு வாக்கு, அதற்கு மேல் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அளித்திடவும், நமது வேட்பாளர்கள் அனைவரும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிடவும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஏஜெண்டுகள் கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும்...
எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எந்த காரியத்தையும் செய்திட துடித்துக் கொண்டிருப்பதால், நமது கூட்டணியின் வேட்பாளர்களுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள முகவர்கள் (ஏஜெண்டுகள்) கண்ணும், கருத்துமாகவும் மிகுந்த எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் உரிய இடத்திற்கு எடுத்துச்செல்லப்படும் போதும், அவை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படும்போதும், மிகவும் விழிப்பாக இருந்திட வேண்டும். கவனம், கவனம். கடந்த சில நாட்களாக சுறுசுறுப்பாக பணியாற்றி விட்டு, கடைசி 2 நாட்களில் ஏமாந்து விடக்கூடாது. எச்சரிக்கை தேவை; வெற்றி நமதே" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.