ஊழல் பற்றி ஜெ. பேசுவது ‘சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது: கருணாநிதி
சென்னை: 2 ஜி ஊழலில் தி.மு.க. ஈடுபட்டதாக ஜெயலலிதா பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியுள்ளதாவது:
''கள்ளக்குறிச்சியில் 16 ஆம் தேதி பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "மத்திய அரசில் அங்கம் வகித்தபோது தமிழ்நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க." என்று அவருக்கே உரிய பாணியில் நம் மீது பழி சுமத்தியிருக்கிறார்.
அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை தான் நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப்போல வாய்தா வாங்காமல், விசாரணைக்கு முறையாக ஒத்துழைத்து வருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கலந்து கொள்ளும் ஒவ்வொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் தி.மு.க. ஊழல் புரிந்ததாக வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், அவர் மீது, அவருடைய ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவை நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகளும் கூறப்பட்டன.
ஜெயலலிதா மீது உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல வழக்குகளில் தங்கள் கருத்துகளை, தீர்ப்புகளை அவ்வப்போது வழங்கியிருக்கிறார்கள். அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட ஒருசில வழக்குகளை மேல் முறையீடு செய்து, அந்த தண்டனையில் இருந்து அவர் விடுதலை பெற்ற சில நிகழ்வுகளும் உண்டு. பல்வேறு நீதிமன்றங்களில், பல நீதிபதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை பெற்ற ஜெயலலிதா, தி.மு.க.வின் மீது அலைக்கற்றை ஊழல் என்றெல்லாம் ஊருக்கு ஊர் சென்று பேசுவது என்பது "சாத்தான் வேதம் ஓதுவதைப்போல்" இருக்கிறதா? இல்லையா?.
இனியும் அவர் அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்த வழக்குகளைப் பற்றிய முழு விவரங்களும், அந்த வழக்குகள் விசாரணைகளின் போது என்னென்ன நடைபெற்றது என்ற விவரங்களும் தொடர்ச்சியாக வெளியிடப்படும்" என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.