போணி ஆகாத கருணாநிதியின் அரசியல்: ஓ.பி.எஸ். தாக்கு
சென்னை: கருணாநிதியின் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் நம்பவில்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்து விட்டது என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜனநாயகம் தழைத்தோங்கும் தமிழக சட்டசபை மற்றும் அ.தி.மு.க. அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தியாகராயநகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலையில் நேற்றிரவு நடந்தது.
இக்கூட்டத்துக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்க, அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பா.வளர்மதி, கோகுல இந்திரா ஆகிய 6 அமைச்சர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
அக்கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது :-
திமுக பொதுக்கூட்டம்...
கடந்த 1 வாரத்துக்கு முன்பு இதே இடத்தில் சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.கஸ்டாலின் ஆகியோர் சட்டசபையை விமர்சித்து பேசி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு...
ஜனநாயம் தழைத்தோங்கும் சட்டசபை பற்றி இல்லாததையும், பொல்லாததையும் எடுத்துக்காட்டி சொல்லி உள்ளனர். ஆனால் இவர்களின் பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. சட்டமன்றத்தில் அனைவரும் பேச, குறிப்பாக எதிர்க்கட்சிகள் பேச தாராளமாக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மக்கள் வரவேற்பு...
தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் குண நலங்கள் ஒருங்கே அமையப் பெற்ற முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா, மக்களுக்காக தினமும் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதிமுகவை அழிக்க முயற்சி...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க கருணாநிதி எத்தனையோ முயற்சிகளை கையாண்டார். அவை அனைத்தையும் புரட்சித் தலைவி எதிர்கொண்டு முறியடித்தார்.
காவல் தெய்வம்...
அ.தி.மு.க.வை கட்டிக் காக்கும் காவல் தெய்வமாக புரட்சித் தலைவி விளங்குகிறார். அ.தி.மு.க.வை இரும்பு கோட்டையாக உருவாக்கி உள்ளார்.
வெற்றி மேல் வெற்றி...
புரட்சித் தலைவியின் சிந்தனையில் உதிக்கும் நல்ல திட்டங்கள் அனைத்தும் தொலை நோக்கு திட்டங்கள். இந்த திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மக்களுக்காக உழைக்கும் அம்மாவுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது.
கருணாநிதியின் அரசியல்...
மக்களின் எண்ணங்களை அம்மா செயல்படுத்தி வருவதால் நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் மக்கள் வெற்றியை தந்துள்ளனர். கருணாநிதியின் அரசியல் போனியாக வில்லை.
செல்லாக்காசு...
குடும்ப அரசியல் நடத்தும் கருணாநிதியின் பொய் பிரச்சாரத்தையும், தி.மு.க.வையும், மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை நாடாளுமன்ற தேர்தல் நிரூபித்துள்ளது. தி.மு.க. செல்லாகாசாகி விட்டது. மக்கள் நம்பிக்கையை தி.மு.க. இழந்து விட்டது.
கதை கட்டுகிறார்கள்...
கருணாநிதியின் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தை என்ன பாடு படுத்தினார்கள் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஆனால் மக்கள் இவற்றை மறந்திருப்பார்கள் என நினைத்து கருணாநிதி கதை கட்டி விடுகிறார். அது மக்களிடம் எடுபடாது.
அம்மா பக்கம்...
மக்கள் என்றும் அம்மா பக்கம் தான்' என இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.
பதிலடி...
அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளர் கலைராஜன் எம்.எல்.ஏ. கூறியதாவது :-
கடந்த வாரம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இதே இடத்தில் கூட்டம் போட்டு சட்டமன்றத்தை விமர்சித்துள்ளார். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவால் விடுகிற விதத்தில் இந்த கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறோம்.
சிங்கம் போல்...
சட்டசபைக்கே வராத கருணாநிதி சட்டசபையில் நடப்பதை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றினர். அதற்கு மறுநாள் சட்டசபைக்கு சிங்கம் போல் வந்த புரட்சித் தலைவி தன்னந்தனியாக வந்து பேசினார்.
தைரியமில்லை...
அப்போது அமைச்சர்கள் 62 முறை குறுக்கிட்டனர். ஆனால் அவற்றுக் கெல்லாம் சளைக்காமல் தனது வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவரது முகத்தைப் பார்க்க கூட கருணாநிதிக்கு தைரியம் இல்லை' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
நன்ரியுரை...
கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி, சரஸ்வதி ரங்கசாமி, பகுதி செயலாளர்கள் ஏழுமலை, வெங்கேடசன், நுங்கை மாறன், வி.கே.பாபு, வீடியோ சரவணன், தி.நகர் சத்யா, விஜயராம கிருஷ்ணா, ஸ்டிக்கர் ரவி, யு.கற்பகம், கோதண்டராமர், பவானி சங்கர், ஏ.ஏ. அர்ஜூனன், டாக்டர் விவேகானந்தன், கவுன்சிலர் பி. ஆறுமுகம் என்ற சின்னையா உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் வட்ட செயலாளர்கள் கருணாகரன், ஆர்.சி. ஆறுமுகம் நன்றி கூறினர்.