விசாரணை கமிஷன் முன்பு நேரில் ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது குறித்து விசாரித்து வரும் நீதிபதி ரகுபதி கமிஷன் முன்பு நேரில் ஆஜராக, திமுக தலைவர் கருணாநிதிக்கு விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. பணிகள் முழுமை பெறாத நிலையிலேயே, 2010-ம் ஆண்டு மார்ச்சில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலக கட்டிடம், பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. புதிய தலைமைச் செயலக கட்டுமானம் தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசுத் தரப்பிலிருந்தும் கட்டிட நிறுவனங்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களைப் பெற்று, நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நீதிபதி ரகுபதி கமிஷன் முன்பு வரும் 18-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு வேண்டுமென்றே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், உரிய அதிகாரம் இல்லதாதால், விசாரணைக் கமிஷன் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் அமர்வு, விசாரணை கமிஷன் முன்பு கருணாநிதி நேரில் ஆஜராக விலக்கு அளிப்படுவதாக தெரிவித்தது.