திமுகவில் மீண்டும் அழகிரியா?: கருத்து தெரிவிக்க கருணாநிதி மறுப்பு!
சென்னை: திமுகவில் மு.க. அழகிரி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களூக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
செய்தியாளர்: பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு -- வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருக்கிறபோது, உங்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது?
பதில்: என்னுடைய மனநிலை எப்போதும் போலத்தான் இருக்கிறது.
செய்தியாளர்: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கான தேதியை நீதிபதி அறிவித்துள்ள இதே நாளில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை, மத்திய சட்ட அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறாரே? இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: இதற்காக மத்திய அரசை குறை கூறுவது முறையுமல்ல; நியாயமுமல்ல! மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன்
செய்தியாளர்: வர இருக்கிற தீர்ப்பு, தமிழக அரசியலில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
பதில் : என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ; மன மாற்றத்தை ஏற்படுத்தும்.
செய்தியாளர் : மு.க.அழகிரி மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று செய்தி வருகிறதே?
பதில் : பத்திரிகைகாரர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை.
செய்தியாளர் : கலாநிதி மாறன் சகோதரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறதே?
பதில் : நீங்கள் சொல்லித்தான் இந்த செய்தியே எனக்குத் தெரியும். இதில் கருத்துக் கூற விரும்பவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.