''ஆணி வேரில் ஆசிட் ஊற்ற அனுமதிக்கலாமா?''
சென்னை: இணையதள திமுகவினருக்காக திமுக தலைவர் கருணாநிதி சிறப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இணையதளத்தில் தீவிரமாக செயல்படும் திமுகவினருக்காக அவர் இப்படிக் கடிதம் எழுதுவது அனேகமாக இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இணைய உடன் பிறப்பே என்று விளித்து கருணாநிதி எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது...
இணைய உடன்பிறப்பே!
நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் சுதந்திரத்தை இணையம் வழங்கியிருக்கிறது.பொறுப்புணர்ந்து கருத்தினைச் சொல்கிறாய். பொறுப்பற்றவர்களின் நடவடிக்கைகளைக் கண்டிக்கிறாய்.
துணிச்சல்காரர்கள் நீங்கள்
அதிகாரத்தில் உள்ளவர்களின் அச்சுறுத்தலுக்குச் சிலர் அடிபணிந்து அமைதியாகி விடுகிறார்கள். ஆனாலும் உன்னைப் போன்ற பலர் துணிச்சலுடன் மனதில் பட்டதைப் பதிவுசெய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உனக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பறிக்க நடக்கும் அராஜகத்தையும் சொல்லிவிடுகிறாய். நடப்பது திருவிழா அல்ல; அடுத்த ஐந்தாண்டிற்கு நாட்டின் திசையைத் தீர்மானிக்கும் மக்களின் தீர்ப்பு!
பிரதமராவதற்காக நிற்கவில்லை
தேர்தல் களத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் பிரதமராவதற்காக நிற்கவில்லை; இன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவையான, நல்லிணக்கச் சூழலுக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பணியாற்ற விரும்பும் கொள்கையுடையவர்கள் வெற்றி பெறவேண்டுமே தவிர தனி நபர்கள் முக்கியமில்லை. தனிநபர்களைவிட அவர்களை இயக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகள் பரிசீலிக்கப்படவேண்டும்.
அமைதி காக்கிறார்களே ஏன்...
இணையத்தில் கூட தி.மு.க. தேர்தல் அறிக்கைபற்றி கருத்து தெரிவித்தவர்கள் மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பற்றி அமைதி காக்கிறார்களே ஏன்? சொல்வதற்குத் தயங்குகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை! சொல்வதற்கு ஏதும் இல்லை என்பதால் சொல்லாமல் விட்டிருக்கலாம்.
கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும்
எப்படியோ போகட்டும். இந்த நிலையில் அச்சுறுத்தலைக் கடந்து கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும். தமிழ் மொழி,கலை, இலக்கியம், மரபு,பண்பாடு, சமத்துவம், சமூகநீதி, மத நல்லிணக்கம் ஆகியவை போற்றப்படவேண்டும். வேர்களைக் காப்பாற்றி விழுது விடும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் கொள்கைத் தகுதியும் உரிமையும் உடையவர்கள் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
பதில் தாக்குதலுக்குத் தயாராக
"தி.மு.க. வை யார் குறை கூறினாலும் அங்கே சரியாய் ஆஜராகி பதில் தாக்குதலுக்குத் தயாராய் உடன்பிறப்புகள் உள்ளனர் என்று உன்னைப் பாராட்டி இந்தியா டுடே (ஏப்ரல்,16, 2014) எழுதியிருப்பதைப் பார்த்திருப்பாய். மேலும் அந்த இதழில்,"கட்சிகளின் ஃபேஸ்புக் பக்களுங்களுக்கு லைக்" என்று ஒரு பெட்டிச் செய்தியும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், இணையத்தில் "தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 1,22,000 பேர்; அ.தி.மு.க.வுக்கு 30361 பேர்; தமிழக பா.ஜ.க.வுக்கு 12,749 பேர்; தே.மு.தி.க.வுக்கு 6036 பேர்; சி.பி.ஐ.(எம்)க்கு 2747 பேர்; பா.ம.க.வுக்கு 2205 பேர்; ம.தி.மு.க.வுக்கு 1104 பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
உன்னோடு இருப்பது பெருமை
உனது கருத்துகளையும் உணர்வுகளையும் நேரடியாக அறிந்துகொள்ளவும் பகிர்ந்துகொள்ளவும் இணையம் உரிய வாய்ப்பளித்திருக்கும் உலகில் உன்னோடு இருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்.
அடுத்த தலைமுறை வாழ்வை அடமானம் வைக்கலாமா...
ஆதிக்க சாதிகளின் அதிகாரப் பசிக்கோ, அதிகார வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலுக்கோ அடுத்த தலைமுறையின் வாழ்வை அடமானம் வைக்கலாமா? சாதி, மதம் பெயரால் நல்லிணக்க வாழ்க்கைச் சூழலை நாசமாக்க விடலாமா? இது வாழும் காலத்திற்கு நாம் செய்யும் மரியாதையாகுமா?
திட்டமிட்டு சீரழிப்பு
வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் சிலையைப், பராமரிக்கக்கூட போராட வேண்டியிருக்கிறது. செம்மொழிப் பூங்கா,தொல்காப்பியப் பூங்கா, அறிவுபெற உருவாக்கப்பட்ட அறிஞர் அண்ணா நூலகம் எல்லாம் திட்டமிட்டே சீரழிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தத் தொடங்கப்பட்ட - அறிஞர் அண்ணா அவர்களின் கனவான சேது சமுத்திரத் திட்டம் தொடர வழிவிடப்படவில்லை.
ஒவ்வாமைச் சொல் ஆகி விட்டதே
இப்படி நம் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய விழுமியங்களையும் நெறி தவறாத வாழ்வாதாரங்களையும் காத்திடவும் வளர்த்திடவும் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடரப்படவில்லை; மாறாக முடக்கப்பட்டுள்ளன. செம்மொழி என்ற சொல் கூட அரசு அரங்குகளில் ஒவ்வாமைச் சொல் ஆகிவிட்டதே!
ஆணி வேரில் ஆசிட் ஊற்றலாமா...
இந்தியாவில் தமிழ் நாடு ஒரு மாநிலம்; மொழி,இலக்கியம்,கலை,மரபு, பண்பாடு, வாழ்வியல் விழுமியங்களில் (Values) ஒவ்வொரு மாநிலமும் வேறுபட்டிருக்கின்றன. தமிழ்நாடு தனித்த - தன்னிகரற்ற விழுமியங்களைக் கொண்டிருக்கிறது. இந்தியப் பண்பாட்டு ஆணி வேரைத் தேடிப்போனால் அது சிந்துவெளித் தமிழர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஆணி வேரில் ஆசிட் ஊற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கலாமா?
இணைய உடன்பிறப்பே!
இதை, உற்றார் ,உறவினர், நண்பர்களுக்குத் தெரிவிப்பதோடு உலகுக்கும் நீ உணர்த்த வேண்டாமா என்று கூறியுள்ளார் கருணாநிதி.
அழகுத் தமிழுடன் கலந்த ஆங்கிலத்தில்
கருணாநிதி இணையதள திமுகவினருக்காக எழுதிய இந்தக் கடிதத்தின் தலைப்பில் அழகுத் தமிழுடன் ஆங்கிலத்தை அழகாக கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது.