உடைகிறது கார்த்திக் கட்சி... கருணாசின் ‘முக்குலத்தோர் புலிப்படையில்' இணைகிறது ஒரு பிரிவு
சென்னை: நடிகர் கார்த்திகை விட நடிகர் கருணாஸ் சிறந்த சமுதாய தலைவராக இருப்பார் என அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரான கார்த்திக், காங்கிரஸ் கட்சிக்காக காரசாரமாக தேர்த்ல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், அவரது கட்சியே இப்போது உடையப் போகிறது.
பணத்திற்காக கட்சியை விற்று விட்டார் என கார்த்திக் மீது அவரது கட்சியினர் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். இதனால் கார்த்திக்கை விரைவில் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு புதிய தலைவராக நடிகர் கருணாஸ் நியமிக்கப் படலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக, இன்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் மாநில தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது :-
கிடைச்சதையும் வேணாம்னு சொல்லிட்டார்...
சமுதாய மக்களை திறம்பட வழி நடத்துவதற்காகவே நடிகர் கார்த்திக் தலைமையிலான கட்சியில் இருந்து நாங்கள் பணியாற்றினோம். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினோம். இதில் எங்களுக்கு ஒரு இடம் கொடுக்க அந்த கட்சிகளின் தலைமை கொடுக்க முன்வந்தது. ஆனால் நிறுவனத்தலைவர் நடிகர் கார்த்திக் அதை புறக்கணித்து விட்டார்.
திறமையில்லாத தலைவர்...
கட்சி நிர்வாகிகளான எங்களையும் அவர் சந்திக்கவில்லை. கட்சியின் பொருளாளர் இறந்தபோதும் அஞ்சலி செலுத்த அவர் வரவில்லை. அவருக்காக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கும் அவர் வருவது இல்லை. நல்ல தலைமை பண்போ, சமுதாய மக்களை வழிநடத்தும் திறமையோ அவருக்கு இல்லை.
சமுதாய மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்...
தனிச்சையாக முடிவெடுத்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்று அறிவித்து, பிரசாரத்திற்கும் சென்று விட்டார். இது அவரையே நம்பியிருக்கும் சமுதாய மக்களுக்கு அவர் செய்த துரோகமாகும். காங்கிரஸ் கட்சியிடம் மண்டியிட்டு சமுதாய மக்களை அடிமையாக்கப்பார்க்கிறார்.
கட்சியை விற்று விட்டார்...
பணத்திற்காக கட்சியை காங்கிரசிடம் விற்று விட்டார். அவர் தன்னுடைய செல்போனையும் ‘ஆப்‘ செய்து வைத்து விட்டார்.
கருணாஸ் தலைமையில்...
எனவே நாங்கள் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டு நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் சேருவதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.
கார்த்திக்கை விட கருணாஸ் மேல்...
நாடாளும் மக்கள் கட்சியில் உறுப்பினராக உள்ளவர்களில் ஒரு லட்சம் பேர் எங்களுடன் கருணாஸ் அமைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை இணைகின்றனர். கார்த்திக்கை விட கருணாஸ் சிறந்த சமுதாய தலைவராக இருப்பார்.
விரைவில் அரசியல் கட்சியாகும்...
முக்குலத்தோர் புலிப்படை விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2016&ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடும். இதற்கான அறிவிப்பை கருணாஸ் வெளியிடுவார்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வரவேற்பு...
இது தொடர்பாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், நடிகருமான கருணாசிடம் கேட்டபோது, ‘எங்கள் அமைப்பில் சேருவதற்கு அவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். எங்கள் அமைப்பு அரசியல் கட்சியாக மாறுவது குறித்து இப்போது முடிவு செய்யவில்லை‘ எனக் கூறியுள்ளார்.
மறுபடியும் மொதல்ல இருந்தா...
ஆரம்பத்தில் சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் கார்த்திக். அது நன்றாகத்தான் இருந்தது. அதை வைத்து அவரை பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்த்தார்கள். அதில் பிரச்சினையானதால் வெளியில் வந்து கட்சி தொடங்கினார் கார்த்திக். இப்போது அந்தக் கட்சியும் உடையப் போவதால் மறுபடியும் புதுக் கட்சி தொடங்குவாரா அல்லது அனைவருக்கும் முன்னாடி இவர் போய் கருணாஸைப் பார்த்து கட்சியில் சேர்ந்து தப்பிப்பாரா என்பது தெரியவில்லை.