தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நடப்பாண்டிலேயே தொடங்க வேண்டும்... மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நடப்பாண்டிலேயே தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க தகுதியான 3 அல்லது 4 இடங்களைத் தேர்வு செய்யும் படி மத்திய சுகாதாரத் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ஜெயலலிதா. அதில், இந்தாண்டே தமிழகத்தில் எய்ம்ச் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது :-
மகிழ்ச்சி....
தங்கள் தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சி அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (‘எய்ம்ஸ்') மருத்துவமனை தொடங்க இருப்பதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடிதம் கிடைத்தது...
தமிழ்நாட்டில் புதிதாக ‘எய்ம்ஸ்' மருத்துவமனை தொடங்க தகுதியான 3 அல்லது 4 இடங்களை தேர்வு செய்யும்படி மத்திய சுகாதார துறை அமைச்சகம் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.
கோரிக்கை...
அதற்காக முதலில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் முதல் கட்டத்தில் தற்போதைய நடப்பு நிதி ஆண்டிலேயே தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இடம் தேர்வு...
அதற்காக மத்திய அரசுக்கு தேவைப்படும் இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளது. அவை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கி பட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகும்.
அனைத்து வசதிகளும்...
இந்த இடங்களில் தேவையான ரோடு வசதி உள்ளது. தமிழக அரசு மற்றும் அதன் நிறுவனங்களால் இந்த வசதி ஏற்கனவே அங்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 இடங்களிலும் தேவையான தண்ணீர் மற்றும் மின்சார வசதியும் உள்ளது. ரயில் மற்றும் விமான போக்கு வரத்து இணைப்பு வசதியும் உள்ளன.
தரமான மருத்துவக் கல்வி...
இதற்காக மத்திய அரசுக்கு தேவையான அனைத்து விரிவான தகவல்களையும் வழங்கும்படி தமிழக அரசு அதிகாரிகளுக்கு ஏற்கனவே நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை நிர்வாகம் உருவாக்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இதன் மூலம் தமிழ் நாட்டில் தரமான மருத்துவ கல்வியுடன் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் சுகாதாரமும் மேம்படும்.
பெருமையுடன் கூடிய சாதனை...
இதுபோன்ற திட்டங்களை விரைவாக நிறைவேற்றி தமிழக அரசு பெருமையுடன் கூடிய சாதனை படைத்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டிலேயே தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்' மருத்துவமனை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.