குஷ்புவுக்கு சரியாயிருச்சு: மீண்டும் 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்
சென்னை: நடிகை குஷ்பு மீண்டும் நான்கு நாட்கள் பிரசாரம் செய்யப் போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்த சில தினங்களாக அவர் பிரசாரம் செய்யவில்லை, உடல்நலக் கோளாறு காரணமாக அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் 4 நாட்கள் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம்
இன்று மாலை 3.30 மணிக்கு விழுப்புரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முத்தையனை ஆதரித்து விழுப்புரத்தில் குஷ்பு பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விக்கிரவாண்டி, திண்டிவனம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
காஞ்சிபுரம்
மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து அச்சரப்பாகத்தில் பிரசாரம் செய்கிறார். பின்னர் மதுராந்தகம், சிங்கப்பெருமாள் கோவில், சோத்துப்பாக்கம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
மத்திய சென்னை
நாளை (20-ந்தேதி) தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 21-ந்தேதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தென்சென்னை தொகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
திருவள்ளூரில் குஷ்பு
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருவள்ளூர் தொகுதியில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.