கூடங்குளம் 2வது அணு உலையில் விரைவில் வெப்ப நீர் சோதனை
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது போல் இரண்டாவது அணு உலையில் பணிகள் முடிந்து இன்னும் 2 வாரத்தில் வெப்ப நீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி விட்டது.
இந்த அணு உலையில் இருந்து கணிசமான அளவு மின்சாரம் கிடைத்து வருகிறது. இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தியை துவங்க இந்திய அணுசக்தி கழகம் திட்டமிட்டிருந்தது. முதல் அணு உலையில் உற்பத்தியை தொடங்கிய போது முதலில் 160 மெகா வாட் கிடைத்தது. பின் அது படிப்படியாக 1000 மெகா வாட் வரை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கி 1 வருடம் ஆகிவிட்டது. இதனால் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 15ம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1 மாத காலமாக முதல் அணு உலையில் உறுதி தன்மை, அழுத்தம், வெப்பம் தாங்கும் திறன் உள்பட பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்த ஆய்வுகள் அனைத்தும் இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் வழங்கப்பட்டது. முதல் அணு உலையில் விரைவில் வாணிக ரீதியாக மின்சாரம் தயாரிக்க அணு மின் நிலையம் திட்டமிட்டு வருகிறது. இதில் மின் உற்பத்தியை துவங்கிய உடன் 2 நாட்களுக்குள் 1000 மெகா வாட் மின் உற்பத்தியை எட்டி விடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் இரண்டாவது அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டத்திற்காக அனைத்து இறுதி கட்ட பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் இரண்டாவது அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.