கும்பகோணம் பள்ளி தீ விபத்து: 10 ஆண்டுகள் கழித்து வந்த தீர்ப்பு, 565 ஆவணங்கள் சமர்பிப்பு
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தார்கள். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த பள்ளியில் படித்த குழந்தைகளில் 94 பேர் உடல் கருரி பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
200 குழந்தைகள்
தீ விபத்து ஏற்பட்டபோது பள்ளியில் 200 குழந்தைகள் இருந்தனர். தீ பிடித்த உடன் போதிய வசதி இல்லாத காரணத்தால் தான் பள்ளியை விட்டு வெளியேற முடியாமல் 94 குழந்தைகள் பலியாகினர்.
பிஞ்சுகள்
தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளும் 7 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது
தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 24 பேரை கைது செய்து 3 பேரை விடுவித்தனர். மீதமுள்ள 21 பேரில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.
10 ஆண்டு
தீ விபத்து சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவுகள்
தீ விபத்து குறித்து 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நீதிமன்றத்தில் 565 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.
விசாரணை
பள்ளி தீ விபத்து குறித்த விசாரணை கடந்த 2012ம் ஆண்டு துவங்கியது. இந்த வழக்கில் மொத்தம் 230 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
குற்றப் பத்திரிக்கை
இந்த வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆய்வு
பள்ளிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் யாரும் ஆய்வு நடத்தாமல் அனுமதி அளித்தது தெரிய வந்தது.
நஷ்டஈடு
விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடு வழங்கியது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வலியுறுத்தி பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கட்டுப்பாடுகள்
கும்பகோணம் பள்ளி விபத்தை அடுத்து தான் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.