கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு- நிவாரணத்துக்கான சண்முகம் குழு நியமனம் சரியே: உச்சநீதிமன்றம்
டெல்லி: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் கூடுதல் நிவாரணம் அளிப்பதற்காக நீதிபதி சண்முகம் குழு அமைத்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தள்ளுபடியானது.
2004ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் கருகி பலியாகினர். இது தொடர்பான வழக்கில் தஞ்சாவூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றமும் தீர்ப்பு
குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 11 பேரை விடுதலை செய்தது. இதனிடையே இதே பள்ளி தீ விபத்து வழக்கில் உச்சநீதிமன்றமும் ஒரு முக்கியமான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
பின்னணி என்ன?
2004-ல் நிகழ்ந்த பள்ளி தீ விபத்து குறித்து விசாரிக்க அன்றைய தமிழக அரசு, நீதிபதி சம்பத் கமிஷனை நியமித்தது. சம்பத் கமிஷன் தனது அறிக்கையில், எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் 900 மாணவர்கள் இங்கு படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தெரிவித்தது.
அந்த அறிக்கையை, சிறு மாற்றமும் செய்யாமல் அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் இழப்பீடு கோரி வழக்கு
இந்திய அரசியல் சாசனம் பிரிவு- 21 மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கும் அரசே பொறுப்பு என்கிறது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை கொடுக்கும் பொறுப்பு அரசுக்கே உள்ளது என்பதை வலியுறுத்தி இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நீதிபதி சண்முகம் கமிஷன்
வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, அதே நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ந் தேதியன்று நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து 2 வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அதை தமிழக அரசு நிறை வேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், நாரிமன் பெஞ்ச் முன்பு இன்று வந்தது.
இன்றைய விசாரணையின் முடிவில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் நீதிபதி சண்முகம் குழு தங்களது விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ளலலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.