3 ஆண்டுகளில் 18 முறை அமைச்சரவையை மாற்றியது தான் அதிமுகவின் சாதனை... குஷ்பு
விழுப்புரம் : 3 ஆண்டு காலத்தில் அமைச்சரவையை 18 முறை மாற்றியமைத்ததைத் தவிர மக்களுக்கு எதையும் செய்யாத அ.தி.மு.க.வுக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என திமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை குஷ்பு தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் முத்தையனை ஆதரித்து விழுப்புரம் மந்தக்கரை திடலில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகை குஷ்பு.
அப்போது அவர் கூறியதாவது....
எண்ணிப் பாருங்கள்...
தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்துள்ள சாதனைகளை சொல்லி பொதுமக்களிடம் எளிதாக வாக்குகளைக் கேட்கலாம். வருகிற 24-ந் தேதி ஓட்டுபோட செல்லும் முன்பு, கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நாடு எப்படி வளர்ச்சியடைந்திருந்தது, ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தனர் என்று எண்ணிப் பார்த்து ஓட்டு போடுங்கள்.
எதுவும் இல்லை...
இன்றைக்கு விலைவாசி உயர்வு விண்ணை தொட்டுள்ளது. மின்சாரம் இல்லை, தண்ணீர் பிரச்சினை. சட்டம்- ஒழுங்கு சரியில்லை.
தொழில் வளர்ச்சியும் குறைவு....
தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சி 13.7 சதவீதமாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் 4.1 சதவீதம் தான் தொழில் வளர்ச்சி உள்ளது.
பயம் வந்து விட்டதா...?
சிறுபான்மையினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு, அதிலும் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடும் வழங்கியவர் கருணாநிதி. முதலில் நீங்கள் உங்களை பாரத பிரதமர் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது மத்தியில் அமையப்போகும் ஆட்சியில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு பயம் வந்து விட்டதா?
ஜெ. பேச்சு வேடிக்கையாக உள்ளது...
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது 3 மாதத்திற்குள் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறினார். ஆனால் செய்யவில்லை. எந்த அடிப்படையில் அதை சொன்னார். தலைவர் கருணாநிதி மின்வெட்டு பிரச்சினையை போக்க திட்டங்களை தயார் செய்து வைத்திருந்தார். அந்த திட்டங்களை செயல்படுத்தியிருந்தால் மின்வெட்டு பிரச்சினை இருந்திருக்காது. இதை செய்யாமல் மின்வெட்டு பிரச்சினைக்கு ‘சதிதிட்டம் செய்கிறார்கள்' என்று ஜெயலலிதா கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.
பாடம் புகட்டுங்கள்....
கடந்த 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. எனவே வருகிற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் முத்தையனை வெற்றி பெற வைக்க வேண்டும்'
இவ்வாறு குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டிவனம்....
விழுப்புரத்தைத் தொடர்ந்து திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த பிரசாரத்தில் குஷ்பு பேசியதாவது :-
கருணாநிதி எந்த திட்டம் செய்தாலும் அதை பலமுறை யோசித்து முடிவு எடுப்பார். அதனால் தான் இந்த தேர்தல் அறிக்கையிலே, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக்கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என கூறியுள்ளார்.
வெட்டப்பட்ட மரங்கள்...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஜெயலலிதா பிரசாரம் செய்வதற்காக மட்டும் தமிழகத்தின் 40 இடங்களில் ஹெலிபேடு அமைத்துள்ளார். இதற்காக 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஒரு இடத்தில் பிரசாரம் செய்வதற்கு ரூ.2.5 கோடி செலவாகிறது. தமிழகத்தில் இன்று ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறவில்லை. அது வெறும் காட்சி தான்.
அமைச்சரவையை மாற்றியது தான் சாதனை...
கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் போட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 18 முறை அமைச்சரவையை மாற்றியமைத்தது ஜெயலலிதாவின் சாதனை. தமிழகத்தில் கருணாநிதி காலத்தில் இருந்த பொற்காலம் மீண்டும் மலர தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள்'
இவ்வாறு குஷ்பு வாக்குச் சேகரித்தார்.