ஓடும் ரயிலில் பிரசவம்- வைகை எக்ஸ்பிரசில் குழந்தை பெற்ற மதுரை பெண்!
தாம்பரம்: சென்னையில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலிலே பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி நந்தினி . இவருடைய அக்கா முத்துமாரி என்பவரின் வீடு சென்னை சைதாப்பேட்டையில் உள்ளது.
கர்ப்பிணியான நந்தினி, அக்கா முத்துமாரியைப் பார்க்க சென்னை வந்தார்.
மதுரைக்கு பயணம்:
பின்னர் நந்தினி, அவரது அக்கா முத்துமாரி மற்றும் அவரது குழந்தைகள் 2 பேர் என 4 பேரும் மதுரைக்கு செல்ல வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று மதியம் எழும்பூரில் இருந்து புறப்பட்டனர்.
திடீர் பிரசவ வலி:
எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு பல்லாவரம் அருகே வரும்போது நந்தினிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.
அழகிய ஆண்குழந்தை:
இதையடுத்து அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த ஆண் பயணிகள் அனைவரும் எழுந்து சென்றுவிட, ரயிலில் இருந்த பெண் பயணிகள் நந்தினிக்கு பிரசவம் பார்த்தனர். தாம்பரம் ரயில் நிலையம் வருவதற்குள் நந்தினிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலம்:
இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தாயும், குழந்தையும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாமதமாக புறப்பட்ட ரயில்:
அங்கு தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக 2.15 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.