வாடகைக்கு இருந்தவர்கள் செய்த பிரச்சனையால் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!
வேலூர்: வேலூரில் வீட்டுப் பிரச்சனைக்காக ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளித்த பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் விருதம்பட்டு, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி மல்லிகா.
இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த இருவர் வீட்டைக் காலி செய்ய மறுத்ததுடன், சீட்டுப் பணமாக ரூபாய் 1.50 லட்சம் வாங்கிக் கொண்டு அதையும் தர மறுத்துள்ளனர். இதை தட்டிக் கேட்ட மல்லிகாவை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரை வேலூர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மல்லிகா கோரிக்கை மனு, 5 லிட்டர் கேன் ஒன்றில் பெட்ரோலுடன் வேலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.
குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில், அவர் ஆட்சியர் அலுவலகப் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகே தீக்குளித்தார்.
தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால், அவர் அங்கும் இங்கும் ஓடினார். இதைக் கண்ட பொது மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர் கீழே விழுந்து துடித்தார்.
சுமார் 25 நிமிடம் கழித்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தடைந்தன. அவற்றில் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்ட மல்லிகா, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90 சதவீதம் அளவுக்கு தீக்காயமடைந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மல்லிகா உயிரிழந்தார்.