தேர்தல் முடிவு வருகையில் சிரிப்பது யார், அழுவது யார் என தெரியும்: தா. பாண்டியன்
திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது சிரிப்பது யார், அழுவது யார் என்று தெரியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக பவானியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்டுகள், தேமுதிக ஆகிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் தான் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தற்போதோ சிரித்துக் கொண்டே கூட்டணியில் இருந்து பிரிந்துவிடலாம் என்றார். அவர் பிரிந்து சென்றததை பற்றி ஒன்றும் கவலை இல்லை.
நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து விடப்படவில்லை. இது மண்ணோடும், மக்களோடும் கலந்த இயக்கம். மே 16ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு சிரிப்பது யார், அழுவது யார் என்பது தெரியும்.
முதலில் நான் தான் பிரதமர் என்று கூறினார் ஜெயலலிதா. ஆனால் தற்போது அதிமுக பங்குகொள்ளும் மத்திய அரசு அமையும் என்று கூறி வருகிறார். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தால் பங்குகொள்வீர்கள் என்பதை ஜெயலலிதா தெளிவாக கூற வேண்டும் என்றார்.