மது விற்ற பணத்தில் உணவருந்துபவர்கள் சபிக்கப்பட்டவர்கள்- வைகோ
சென்னை: மதுவின் கொடுமையால் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வைகோ வேதனை தெரிவித்துள்ளார். மதுவிற்ற பணத்தில் உணவருந்துபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ம.தி.மு.க. சார்பில் புனித ரமலான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் முராத் புஹாரி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய வைகோ, கிருஷ்ணகிரியில் ஒரு இளம்பெண்ணை 4 கயவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்ற செய்தியை நாளிதழில் படித்த போது அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய நெஞ்சம் வேதனையால் துடித்தது. 8 வயது, 10 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் மதுவின் கொடுமையே.
மதுவை பயன்படுத்துகிறார்கள், வாங்குகிறவர்கள், விற்பவர்கள், மதுவை பரிசாக அளிப்பவர்கள், மது விற்ற பணத்தில் உணவருந்துபவர்கள் என அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார். எந்த மார்க்கமும் மதுவை ஆதரிக்கவில்லை.
மதுவின் கொடுமைக்கு எதிராக, ஏழை பெண்களின் கண்ணீரை துடைப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,700 கிலோ மீட்டர் தொலைவு நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறேன்.
மக்களிடையே சமூக நல்லிணக்கம் வளர வேண்டும். மோதல் இல்லாமல் மக்களிடையே அன்பு வளர வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்கள் மார்க்கத்தின் நெறிமுறைகளை கடைபிடித்து வாழ வேண்டும். சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்துக்கும் அடையாளப்படுத்துவதாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி திகழ்கிறது என்றார் வைகோ.
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மின்னல் முகமது அலி உள்பட ம.தி.மு.க. நிர்வாகிகளும், புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹமுத் மவுலானா எஸ்.முகமது அலி, தாம்பரம் மதரஸ்துல் பலாயா நிறுவனர் இமாம் கா.அகமது அலி உள்பட இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.