குடிகாரர்களின் 'குவார்ட்டரில்' குண்டைப் போட்ட டாஸ்மாக்... இன்று முதல் மது விலை உயர்வு!
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மது பானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடைகளில் பீர் முதல் அனைத்து வகை இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையும் ரூ. 5 முதல் 60 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
வாங்கிக் குடிக்கும் குடிகாரர்களில் பெரும்பாலானோர் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என்பதால் இந்த விலை உயர்வால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் குடிக்காமல் விடுவதில்லை என்ற வேகத்துடன் அவர்கள் காலையிலேயே கடைகளில் அலை மோதியதையும் காண முடிந்தது.
விலை உயர்வு இன்று அமலாவதையொட்டி நேற்று இரவே பலரும் கடைகளில் குவிந்து கை நிறைய பாட்டில்களை பழைய விலையில் வாங்கிக் கொண்டு சென்றதைக் காண முடிந்தது. நேற்று மாலைக்கு மேல் டாஸ்மாக் கடைகள் முன்பு பெரும் கூட்டம் அலை மோதியது.
விலை உயர்வால் வழக்கமாக குடிக்கு செலவழிக்கும் தொகையை விட கூடுதலாக செலவழிக்க வேண்டியுள்ளதாக குடிகாரர்கள் புலம்புகின்றனர். ஆனாலும் குடிப்பதை நிறுத்த மாட்டோம் என்றும் தங்களது கொள்கை முடிவையும் டிக்ளேர் செய்துள்ளனர்.
ஆயத்தீர்வை உயர்வு
தமிழக சட்டசபையில் கடந்த 11-ந்தேதி சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும். இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை உயருகிறது.
டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது.
7 வருடமாக தீர்வை குறைவுதான்
பின்னர், 2007-ம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுக்கு அடுக்காக பிரித்து உயர்வு
இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்கிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களும், அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று இரவு கணக்கை சமர்ப்பிக்கும் போது, அவர்களிடம் புதிய கட்டண விகித அட்டை வழங்கப்பட்டுள்ளது.
ஐந்திலிருந்து அறுபது வரை
அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் புதிய விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயர்ந்துள்ளது.
கூடுதலாக ரூ. 2500 கோடி வருவாய்
இந்த விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சாதா குவார்ட்டர் இனி ரூ. 80
சாதாரண ரக மது, குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) டாஸ்மாக் கடைகளில் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலை ரூ.10 உயர்ந்து, இனி சாதாரண ரக குவாட்டர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும்.
சாதா ஆஃப் ரூ. 160
இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதன் விலையில் ரூ.20 அதிகரித்து, இனி சாதாரண ரகம் ஆப் பாட்டில் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படும்.
ஃபுல் வேணும்னா இனி ரூ. 320 வேணும்
ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.40 அதிகரித்து, ரூ.320-க்கு விற்பனை செய்யப்படும்.
மீடியம் குவார்ட்டர் ரூ. 90
நடுத்தர ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி) ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி) ரூ.320-ல் இருந்து ரூ.360-க்கும் விற்பனை செய்யப்படும்.
ஹை குவாலிட்டி குவார்ட்டர் ரூ. 110 டூ 250
இதே போல், ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.110-க்கும், ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.140 ஆகவும், ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.200 ஆகவும், ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படும்.
ஹை குவாலிட்டி ஆப் ரூ. 220 டூ ரூ. 500
ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.220-க்கும், ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.280 ஆகவும், ரூ.280-க்கு விற்பனையான உயர் ரக ஆப் பாட்டில் ரூ.400 ஆகவும், ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும்.
புல் விலை ரூ. 440 டூ 1000
ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.440-க்கும், ரூ.480-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில்கள் ரூ.560 ஆகவும், ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் ரூ.800 ஆகவும், ரூ.760-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படும்.
பீர் விலையும் ரூ. 10 உயர்ந்தது
அதேபோல், புல் பீர் பாட்டில்கள் அதன் பழைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி வித்தா என்னா.. என்ன விலை வச்சா என்ன.. குடிகாரர்களுக்கு எப்பவுமே சியர்ஸ்தான்!