என் கணவருக்கு 3 மனைவி.. லண்டனிலிருந்து சென்னை கமிஷனருக்கு மெயிலில் புகார் அனுப்பிய புதுவை பெண்!
சென்னை: லண்டனில் வசித்துவரும் புதுச்சேரி பெண் ஒருவர் தன்னுடைய கணவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
லண்டனில் இருந்து புகார் மனு அனுப்பியவரின் பெயர் பிலோமினா.
புதுச்சேரி மாநிலத்தில் இவர் பிறந்து வளர்ந்தார். இவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தற்போதும் புதுச்சேரியில்தான் வசிக்கிறார்கள்.
இரண்டு குழந்தைகள்:
பிலோமினாவுக்கு 8 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
கண்ணீர் பட்டியல்:
இவர் தனது கணவர் மீது சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பிய புகார் மனுவில் அவரது குற்றச்சாட்டுகளை கண்ணீருடன் பட்டியலிட்டுள்ளார்.
காதல் மோசடி:
எனது கணவர் ஒரு மிகப்பெரிய திருமண மோசடி பேர்வழி. ஆன்லைன் மூலம் காதல். அப்புறம் மோசடி திருமணம். இவரிடம் நானும், இன்னொரு பெண்ணும் ஏற்கனவே மோசம் போய் இருக்கிறோம்.
மூன்றாவது திருமணம்:
தற்போது சென்னை பல்லாவரத்தில், 3 ஆவதாக ஒரு பெண்ணை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். லண்டனில் என்னையும், எனது 2 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு இந்த மாபாதக மோசடியை துணிச்சலாக செய்துள்ளார்.
பொய் சொல்லி திருமணம்:
ஆன்லைன் மூலம் காதலித்து, எனது பெற்றோர் சம்மதத்துடன், எனது திருமணம் 2004 ஆம் ஆண்டு நடந்தது. எனது கணவர் சாப்ட்வேரில் வேலைபார்ப்பதாக, என்னிடம் பொய் சொல்லிவிட்டார். அதை நான் ஜீரணித்துக்கொண்டேன். அதன்பிறகு நானே அவரை படிக்க வைத்தேன். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தது.
மனநோயாளி என்று பொய்:
முதல் திருமணத்தை மறைத்து, என்னை 2 ஆவது திருமணம் செய்து, அதிலும் ஏமாற்றினார். அதையும் பொறுத்துக்கொண்டேன். முதல் மனைவி மனநோயாளி என்று பொய் சொல்லிவிட்டார்.
எல்லாவற்றிலும் மோசடி:
என்னை ஏமாற்றி, எனது பணத்தில் அவரது பெயரில் சொத்துகள் வாங்கினார். படிப்பில் மோசடி. திருமணத்தில் மோசடி. வேலையிலும் மோசடி. இப்படி மோசடி மேல் மோசடி செய்ததை தாங்கிக்கொண்டேன்.
பொறுக்க முடியாத துன்பங்கள்:
ஆனால் என்னை குடும்ப வாழ்க்கையில் வெளியில் சொல்லமுடியாத வகையில் துன்புறுத்தினார். தினமும் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தார். அவரது மோசடிகளை தாங்கிய எனக்கு, அவரது துன்புறுத்தல்களை பொறுக்க முடியவில்லை.
விட்டுவிட்டு எஸ்கேப்:
இதனால் லண்டன் போலீசில் புகார் கொடுத்தேன். உடனே என்னிடம் சரண் அடைந்தவர்போல நடித்து மன்றாடினார். அதில் ஏமாந்துபோன நான், புகாரை வாபஸ் பெற்றேன். புகார் வாபஸ் பெறப்பட்டதும், அவர் என்னை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டார்.
பல்லாவரத்தில் வாசம்:
சென்னையில் பல்லாவரத்தில் தங்கி இருக்கும் அவர், 3 ஆவது திருமணம் செய்துள்ளார். நிச்சயமாக அந்த பெண்ணையும் ஏமாற்றுவார். தொடர்ந்து அவர் செய்யும் காதல் லீலைகளையும் தடுத்து, மோசடி திருமணங்களையும் தடுத்து, அப்பாவி பெண்களை காப்பாற்றிட, அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.
உரிய நடவடிக்கை தேவை:
ஆன்-லைன் மூலம் அனுப்பி இருக்கும் எனது புகார் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவும் பணிந்து கேட்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.