பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு - கோயில்களில் மக்கள் கூட்டம்
நெல்லை: பங்குனி உத்திர திருவிழா, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்து வழிபாட்டு தளங்களல் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
இந்துகளின் முக்கிய வழிபாடுகளில் குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். குலம் தலைக்க வேண்டி குல தெய்வ வழிபாடு ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் பல தலைமுறையாக குல தெய்வ வழிபாடு செய்து வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படி சிறப்புகள் வாய்ந்த சாஸ்தா கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்குனி உத்திர தினத்தன்று குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் குடும்பத்தினர் நாட்டில் எங்கிருந்தாலும் பங்குனி உத்திர நாளில் அவர்கள் குலதெய்வம் இருக்கும் கிராமத்தின் காடு பகுதிகளுக்கு சென்று நேர்த்தி கடன் செலுத்தி கிடாய் வெட்டி, பொங்கலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
இந்த திருநாளை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடியில் உள்ள சாஸ்தா கோயில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சாஸ்தா கோயிலில் அனைத்து வகை பரிவார சுவாமிகளுக்கும் காலை, மாலை, நடுஇரவு என சிறப்பு பூஜைகள் நடந்தன.
சீவலபேரி அருகே பூலுடையார் சாஸ்தா கோயில், பிரமாஞ்சேரி சாஸ்தா கோயில், கடையம் சூச்சமுடையார் சாஸ்தா கோயில், செய்துங்நல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா, மணக்கரை அழகர் சாஸ்தா, தாழையூத்து பாலுடையார் சாஸ்தா, கல்லிடை அருகே பாடலிங்க சாஸ்தா, பாபநாசம் சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இந்த கோயில்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வேன், கார், ஆட்டோ, லாரிகளில் வந்து தங்கியிருந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இதில் தங்களது குல தெய்வம் தெரியாதவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர், நெல்லை குறுக்குதுறை முருகன், பாளையஞ்சாலைகுமார சுவாமி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் திரண்டு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து அசைவ விருந்து நடக்கிறது. பின் இன்று மாலை வேண்டுதலை முடித்து அனைத்து சாஸ்தா கோயில்களில் முகாமிட்டிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புகி்ன்றனர்.
இந்த விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 125 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இன்று சித்திரை வருடப்பிறப்பு என்பதால் மாவட்டத்திலுள்ள கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.