அகண்ட காவிரி கண்ட திருச்சியில் 'கம்மி' கூட்டம்.. கோபத்தில் அம்மா...!
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது ஆட்கள் கூட்டம் குறைந்து இருந்ததால் முதல்வர் அப்செட்டாகி விட்டாராம்.
மார்ச் 19-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் என்று முன்பு கூறப்பட்டிருந்தது. பின்னர் அதை ஏப்ரல் 5ம் தேதியாக மாற்றினர்.
மேலும் முதலில் எடமலைப்பட்டி புதூர் மைதானத்தில் முதல்வர் பேசுவார் என்று கூறப்பட்டிருந்தது. பிறகு அதை மாற்றி திருச்சி ஜி கார்னருக்குக் கொண்டு போனார்கள். இப்படி ஆரம்பத்திலிருந்தே நிறைய குழப்பங்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்தபோது, திருச்சி ஜி கார்னர் மைதானத்தில்தான் ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது பெரும் கூட்டம் கூடியது. மேலும் அது அடுத்து வந்த கூட்டங்களிலும் எதிரொலித்தது. ஆட்சி மாற்றத்திற்கும் வித்திட்டது.
மேலும் நரேந்திர மோடி திருச்சியில் நடத்திய இளந்தாமரைக் கூட்டமும் இங்குதான் நடந்தது. எனவே இது அரசியல் ரீதியாக சென்டிமென்ட் ஆன இடமும் கூட.
இப்படி பலதையும் பார்த்துத்தான் இந்த இடத்தில் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்தைப் போட்டார்கள். ஆனால் கூட்டம் கூடவில்லை. ஆட்கள் கூட்டம் குறவாக இருந்தது. இதனால் ஜெயலலிதா அதிருப்தியாகி விட்டார்.
கடைசி வரை இறுக்கமான முகத்துடன் அவர் பேசி விட்டுச் சென்றார். திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் தற்போது கடும் பீதியுடன் உள்ளாராம்.