வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: சென்னையில் திடீர் மழை…
சென்னை: சென்னையில் காலைமுதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலை 5 மணியளவில் பெய்த திடீர் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது. இதமாக வீசிய குளிர்காற்று சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே மழைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை இரவு இரண்டு மணிநேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
செவ்வாய், புதன்கிழமைகளில் மழைக்கு விடுமுறை விட்டிருந்த வானம் நேற்று லேசாக பெய்தது. ஆனாலும் மேக மூட்டத்துடன் இதமான காலநிலையே சென்னையில் காணப்பட்டது.
இதனிடையே இன்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் குளிர் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் ஓடிஸா கடற்கரைக்கு அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், வெள்ளிக்கிழமையும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, மரக்காணம், திண்டிவனம், காட்டுமன்னார்கோயில், கூடலூர், கொள்ளிடம், மாதவரம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.